சுப்பிரமணியன் உடலுக்கு ஓபிஎஸ் நேரில் அஞ்சலி.. காசோலை, பணி நியமன ஆணையை மனைவியிடம் வழங்கினார்
Recommended Video
சென்னை: காஷ்மீரில் வீரமரணமடைந்த இரு வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்த, தூத்துக்குடிக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தி ரூ. 20 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையையும் , பணி நியமன ஆணையையும் சுப்பிரமணியத்தின் மனைவியிடம் வழங்கினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பகுதிக்கு துணை ராணுவப்படையைச் சேர்ந்த வீரர்கள் 70க்கும் அதிகமான வாகனங்களில் கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, புல்வாமா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது 350 கிலோ வெடிபொருட்களுடன் எஸ்சுவி காரில் ஏற்றி வந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி துணை ராணுவப்படை வீரர்களின் வாகனத்தில் மீது மோதி வெடிக்கச் செய்தார். இதில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
திருச்சி விமான நிலையம்
40 பேரில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரனும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனும் வீரமரணமடைந்தனர். இவர்களின் உடல் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இருவரது உடல்களும் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அஞ்சலி
அங்கு இருவரது உடல்களுக்கும் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். அங்கு தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மனைவி
திருச்சி வந்த சுப்பிரமணியனின் உடல் விமானம் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தூத்துக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மனைவி, உறவினர்களே உடலை நெருங்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதியது.
பணி நியமன ஆணை
பின்னர் தூத்துக்குடிக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியத்தின் வீட்டில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையையும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையையும் அவரது மனைவியிடம் துணை முதல்வர் வழங்கி ஆறுதல் கூறினார்.