எதற்காக முதல்வர் அழைக்க வேண்டும்.. ஏன் பிரிந்தவர்கள் மறுக்க வேண்டும்?!
பிரிந்து சென்றவர்களை முதல்வர் திரும்ப ஏன் அழைக்க வேண்டும்?
Recommended Video
சென்னை: எதற்காக முதல்வர் பிரிந்தவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்? எதற்காக பிரிந்தவர்கள் மறுக்க வேண்டும்?
ஒரு வருடமாக இழுபறியாக நீடித்து வந்த வழக்கு 18 எம்எல்ஏக்கள் விவகாரம்தான். இதில் வெற்றி எங்களுக்குத்தான் என்று இரு தரப்புமே சொல்லிக் கொண்டு வந்தார்கள். கடைசியில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வரவும் மற்றொரு தரப்பினர் படு அப்செட்!!
தவறான வழிநடத்தல்கள், மனக்கசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். பிரிந்து சென்றவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்" என ஆளும் தரப்பு அழைக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள் என்று மறுதரப்பு பதிலளிக்கிறது.
நீதி தங்கள் பக்கமா?
முதலமைச்சர் பிரிந்தவர்களை மீண்டும் அழைக்க என்ன காரணம்? சமரச போக்குத்தன்மையின் வெளிப்பாடுதான் இந்த அழைப்பா? அல்லது உங்கள் பிழைகளையும், தவறுகளையும் நாங்கள் மன்னித்து விட்டோம் என்பதின் வெளிப்படுத்தல்தான் இந்த அழைப்பா? அல்லது நீதிமன்றமே எங்கள் பக்கம்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்தி கொள்ளுதல்தான் இந்த அழைப்பா?
எப்படி பார்க்கிறது?
அல்லது 18 தொகுதியின் மக்களும், அதாவது வாக்காளர்களையும் இழந்துவிடக் கூடாது என்பதற்குதான் இந்த அழைப்பா? அல்லது எதற்காக வீண் பஞ்சாயத்து, பிரச்சனை, பகை.. சமரசமாகவே போய்விடலாமே என்ற அரசின் நல்லெண்ண வெளிப்பாடா இந்த அழைப்பு? அதிமுகவின் அழைப்பை எப்படி பார்ப்பது என்று தெரியவில்லை.
மனநிலை என்ன?
ஆனாலும் பிரிந்தவர்கள் மீண்டும் சேர மறுத்து பேட்டி அளித்து வருகிறார்கள். ஜெயலலிதா மறைந்து அடிமேல் அடியை சந்தித்து வரும் இவர்கள் தங்களின் எதிர்கால நிலை என்னவென்று தெரியாமல் விழிக்கிறார்கள். ஆர்.கே.நகர் தவிர வேறு எந்த சந்தோஷத்தையுமே வாரிக் கொள்ளாத டிடிவி தரப்பினரின் உண்மையான மனநிலை நமக்கு தெரியவில்லை.
எண்ண ஓட்டம்
வழக்கமாக டிடிவி தரப்பில் பேட்டி அளித்து வரும் ஒன்றிரண்டு பேர்களே தற்போதும் தங்களின் நிலைப்பாட்டை சொல்லி வருகிறார்கள். இது ஒட்டுமொத்த 18 பேரின் ஒருமித்த கருத்தா? அல்லது ஒரே எண்ண ஓட்டத்துடன்தான் தற்போதும் அதாவது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை போலவேதான் இப்போதும் உள்ளனரா என்றும் தெரியவில்லை.
பதவி, பொறுப்பு
எந்த இடத்திலுமே ஒருமுறை வெளியே வந்துவிட்டால் மீண்டும் அங்கே நுழையும்போது கிடைத்து கொண்டிருந்த அதே மரியாதையும், புகழும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. இதற்கு கட்சியிலிருந்து விலகி வந்த தமிழ்க்குடிமகன் முதல் முல்லைவேந்தன், பரிதி இளம் வழுதி வரை உதாரணமாக சொல்லலாம். எனவே மீண்டும் தாய் கட்சிக்குள் இணைந்தால் போன மரியாதை கிடைக்குமா என்று யோசித்துகூட தினகரன் தரப்பு தயங்கலாம். அப்படியே போனாலும் அங்கு எந்தவிதமான பொறுப்பும், பதவியும் அளிக்காமல் போகலாம்.
மலிவு அரசியல்
குறைந்தபட்சம் தீர்ப்பு வரும்வரையாவது பொறுமையாக இருந்திருந்தால் பரவாயில்லை, அமைச்சர் மீது பாலியல் முதல் ஊழல் வரை கேவலப்படுத்தி விட்டு, இதுபோன்ற புகாரில் இன்னும் 3 அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று மலிவு அரசியலை கையிலெடுத்து விட்டபின்பு, மீண்டும் அதிமுகவில் இணைவது கடினமான ஒன்றுதான்.
காரணம் என்ன?
அதையும் மீறி அதிமுகவை மீட்டுத்தான் எடுப்போமே தவிர மீண்டும் இணையமாட்டோம் என வெற்றிவேல் தெரிவித்துள்ளார். மற்றொரு புறம் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் மீண்டும் திரும்பி வர மாட்டார்கள், தற்போது அழைப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும், அதிமுக ஒரு புதைகுழி என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். காரணத்தை அதிமுக விளக்கினாலும் போக தயாராக இருக்கிறார்களா என்பதை டிடிவி தரப்புதான் சொல்ல வேண்டும்.
தினகரன் குழப்பம்
அதுமட்டும் அல்லாமல் தற்போது தினகரன் தரப்பு மிகவும் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 3 தினங்களுக்கு முன்பு 18 பேருடன் ஆலோசனைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தினகரன் கூறினார். ஆனால் தற்போது "மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க தாம் உள்ளதாகவும், அதுதான் மக்கள் விருப்பம்" என்றும் கூறுகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியாத அளவுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு பெரிய அடியை டிடிவிக்கு வழங்கி உள்ளது.