தினகரனை தவிர யார் வந்தாலும் ஓகேதான்.. எடப்பாடி பழனிச்சாமி
தினகரனை தவிர மற்றவர்கள் இணையலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் தங்களுடன் இணையலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே அமமுகவும், அதிமுகவும் இணைய போவதாக செய்திகள் பரவின. இது சம்பந்தமாக தங்க.தமிழ்செல்வன் பகிரங்க விருப்பத்தை வெளியிட, அதை ஒரு சில அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஆனாலும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு சம்மதம் சொல்லவில்லை. "அதிமுகவுடன் அமமுக இணைவது இமயமலையுடன் காளான் இணைவது போன்றது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆசை இருக்கிறதுபோல தெரிகிறது. எனவே அவர் வரட்டும். அதுவும் இல்லாமல் கட்சித் தொண்டர்களுக்கு ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.
அமமுக - அதிமுக
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவர், அமமுக - அமமுக இணைப்பு குறித்து சொன்னதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எங்களது கடமை பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுமென்று நானும், ஒருங்கிணைப்பாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.
பலர் இணைந்தனர்
அதன்படி பல பேர் இணைந்திருக்கின்றார்கள். அமமுக கட்சியின் ராமநாதபுர அமைப்புச் செயலாளர் என் தலைமையில் நேற்று கட்சியில் சேர்ந்திருக்கின்றார். அவர்களுக்கு அதிமுகவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.
டிடிவி தினகரன்
இதேபோல, வருங்காலங்களிலும் அமமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். ஆனால் டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்" என்றார்.
சட்ட நிபுணர்கள்
முன்னதாக செய்தியாளர்கள் மேகதாட்டு விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, "மேகதாட்டு விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம். இதுகுறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று பதிலளித்தார்.