இவங்க 2 பேரும் சகஜமா பேசிக்கவே மாட்டாங்களா.. பேசினா நல்லா இருக்கும்... ஒரு சின்ன எதிர்பார்ப்புதான்!
முதல்வரும், ஸ்டாலினும் சகஜமாக பேசிக் கொண்டால் சிறப்பாக இருக்கும்
சென்னை: ஒரே விமானத்தில்.. ஒரே வரிசையில் அமர்ந்து பயணித்தும்.. ஒரு வார்த்தை கூட பேசாமலே இருந்திருக்கிறார்கள் முதல்வர் எடப்படி பழனிசாமியும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும்!
தேவர் நினைவிடத்தில், தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவுக்காக மதுரைக்கு இருவரும் சென்றிருக்கிறார்கள்.. ஒரே பிளைட்டில் ஏற வேண்டிய நிலைமை வந்துள்ளது..
ஃபிளைட்டில் முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் முதல்வரும், வலது புறம் ஜன்னல் பக்க இருக்கையில் ஸ்டாலினும் உட்கார்ந்துள்ளனர். இதில் ஸ்டாலின்தான் முதலில் வந்து ஏறி உட்கார்ந்துள்ளார். அதன்பிறகே ஃபிளைட் கிளம்பும்போது முதல்வர் வந்திருக்கிறார்.
முதல்வரும், ஸ்டாலினும் அடிக்கடி அரசியல் ரீதியாக பேசி கொள்வது இயல்பானதுதான்.. எடப்பாடியார் அம்மா இறந்தபோதுகூட துக்கம் விசாரிக்க ஸ்டாலின் சென்றிருந்தார்.. அப்படி தேடி போய் பேசிய ஸ்டாலின் அங்கேயே இருந்த எடப்பாடியாரிடம் ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை.
அதுபோலவே, தன் அம்மாவுக்காக வீடு வரைக்கும் வந்து விசாரித்துவிட்டு போன ஒரு எதிர்கட்சி தலைவரிடம் முதல்வரும் ஏன் பேசவில்லை என்று தெரியவில்லை. இருவரும் பேசியே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லைதான். .. எனினும் ஒருவித எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருந்தது.
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், விமானத்திற்குள்ளும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இல்லை.. இன்னொன்று, எல்லாருமே மாஸ்க் போட்டிருந்ததால், பார்த்து பேச வாய்ப்பிருந்திருக்காது.. ஒருவரை பார்த்து, இன்னொருவர் நட்புடன் சிரித்தால்கூட அது வெளியே தெரிய வாய்ப்பில்லைதான்.
மதுரை வந்ததுமே முதல்வர்தான் முதலில் கிளம்பி சென்றுள்ளார்.. அரை மணி நேரம் கழித்துதான் ஸ்டாலின் இறங்கி உள்ளார்.. ஆனால் தமிழக அரசியல் போல கேரள அரசியல் இல்லை என்றே தொன்றுகிறது..
முன்னாள் முதல்வர் ஈகே.நாயனாரும், ஏ.கே. அந்தோணியும் நெருங்கிய நண்பர்கள்.. இரு குடும்பமும் மிக நெருக்கமானவை.. ஏதாவது மாநிலத்தில் முக்கிய விஷயங்கள் பற்றி மத்திய அரசுடன் ஆலோசனை செய்ய வேண்டுமென்றால், முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சேர்ந்துதான் செல்வது வழக்கம்.
மோடி கையை நீட்டினால்.. அந்த கிளி ஏறவே இல்லையே.. ஏன்?.. வைரல் வீடியோ!
இப்படித்தான் அப்துல் கலாம் இறந்தபோது, முன்னாள் முதல்வரான உம்மன்சாண்டியும் எதிர்க்கட்சித் தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தனும் ஒரே ஹெலிகாப்டரில் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்தபடியே தான் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு போனார்கள்..
சமீபத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதும், முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சி தலைவர், ரமேஷ் சென்னிதலாவும் சேர்ந்துதான், மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயனுடன், எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, அரசியல் ரீதியாக பேசுவதையும் தாண்டி, ஸ்டாலினும், முதல்வரும் ஸ்நேகமாக பேசி கொண்டிருந்தால் தமிழக மக்களுக்கு பார்ப்பதற்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கும்.. எப்படியோ, தமிழக முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் ஒரே பிளைட்டில் பயணித்தார்கள் என்ற சிறப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது!