சசிகலா வந்தா என்ன.. யார் வரவேற்றால் என்ன.. சலசலப்புகளுக்கு அஞ்சாத "சிங்கம்" எடப்பாடியார்..!
எடப்பாடி பழனிசாமி துணிச்சலுடன் கெத்து காட்டி வருகிறார்
சென்னை: இப்படி ஒரு பரபரப்பை தமிழகம் பார்த்ததில்லை.. அதிமுக, அமமுக என்றில்லை, ஒட்டுமொத்த அரசியலே சசிகலாவின் வருகையையும், அதை முதல்வர் எடப்பாடியார் எதிர்கொண்டு வரும் செயல்பாடுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கடந்த ஒரு மாதமாகவே சசிகலாவின் வருகையின் தாக்கம் தொடங்கிவிட்டது.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யூகங்கள், சந்தேகங்கள், கிசுகிசுக்கள், நம்ப தகாத தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
சசிகலா வருகையினால், அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார்கள்.. அதிமுகவை கைப்பற்றும் நோக்கிலேயே சசிகலா முனைப்பாக உள்ளதாகவும், பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர தயாராக இல்லை என்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதை நிரூபிக்கும் வகையிலேயே, காரில் அதிமுக கொடி கட்டி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா.. மற்றொரு பக்கம் ஒருசில அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்படுவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
பொறுமை
ஆனால், எல்லாவற்றையும் பார்த்து கொண்டு அமைதியாக இருக்கிறார் எடப்பாடியார்.. சசிகலா விஷயத்தை பொறுமையாக அணுகுகிறார்.. ஆட்சி தன்னிடம் உள்ளதே என்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படாமல் அதேசமயம் சட்டப்பூர்வமாக ஒவ்வொன்றையும் காய் நகர்த்தி வருகிறார். சசிகலா ஜெயிலில் இருந்தபோது, அவருக்கு பல ஆதரவாளர்கள் லெட்டர் எழுதியபடி இருந்தார்களாம்... அவ்வளவு ஏன், விடுதலையான சமயம், அவரை சிறையில் சந்திக்க விண்ணப்ப மனுக்களையும் ஒருசிலர் தந்துள்ளனர்.. இவ்வளவு தெரிந்தும், எடப்பாடியார் சம்பந்தப்பட்டவர்களை கடிந்து கொள்ளவில்லை.. தன் கோபத்தை வெளிப்படுத்தவில்லை.
இலை
இந்த 4 வருடங்களில் அமைச்சர்களுக்கு அதிலும் சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் உட்பட, அனைவருக்கும் எடப்பாடியார் அதிக சுதந்திரத்தை தந்துள்ளதை மறுக்க முடியாது.. 4 வருடமாக, முதல்வர் வேட்பாளர், இரட்டை தலைமை, பாஜகவுடன் நெருக்கம் என்று அடுத்த குடைச்சலை தந்து கொண்டிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரையே இன்று தன்பக்கம் சாய்த்து விட்டார் எடப்பாடியார்.
நிர்வாகிகள்
இதுபோக, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளையும் அதிருப்தி காட்டாமல், அனுசரித்து அவர்களின் நட்பையும் இறுக்கமாக பெற்றுள்ளார்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மக்களின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்.. இதற்கு நடுவில் திமுகவின் வளர்ச்சியையும் அபரிமிதமாக பெருகவிட்டுவிடாமல், அதிமுகவின் அஸ்திவாரத்தை வலுப்படுத்தி வைத்துள்ளார்.
துணிச்சல்
இப்போது மீதமிருப்பது சசிகலா & கோ மட்டுமே.. மற்றபடி கட்சியும், அதிமுகவும் எடப்பாடியாரின் கைக்குள் என்றைக்கோ வந்துவிட்டதாகவும், இதற்கெல்லாம் தன்மீது தான் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள்.. இல்லாவிட்டால் டெல்லியில், அதுவும் பிரதமரை சந்தித்துவிட்டு வந்த கையோடு சசிகலாவுக்கு இடமில்லை என்று சொல்லும் துணிச்சல் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது.
சசிகலா குடும்பம்
மா.செ.க்களிடம் 2 நாளைக்கு முன்பு எடப்பாடியார் பேசும்போதுகூட, "சசிகலா குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்... அவர்கள் விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கவும் வேண்டாம். அதை, நாங்களே பார்த்துக்கறோம்... நீங்கள் யாரும் கவலைப்படாமல், தேர்தல் வேலைகளை கவனியுங்கள்.. அடுத்த ஆட்சியும் நாமதான்.. சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் சேர்க்கும் எண்ணமே இல்லை.. தேர்தலை ஒட்டி, அரசின் சாதனைகளை பிட் நோட்டீஸ் அச்சிட்டு, வீடுதோறும் தர வேண்டும்.. நம் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்" என்று சொன்னபோதே அவரது உறுதி பன்மடங்கு தெரிந்துவிட்டது.
சசிகலா
இதனிடையே நம்மிடம் பேசிய அதிமுகவினர், "இன்று சசிகலா சென்னைக்கு வருகிறார்.. 4 வருடம் கழித்து ஆதரவாளர்களை சந்திக்க போகிறார்.. அதனால்தான் இப்படி ஒரு பரபரப்பு உள்ளதே தவிர, வேறு எதுவும் இல்லை.. இதெல்லாம் இன்று ஒருநாளோடு முடிந்துவிடும்.. அடுத்து சசிகலா என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை பொறுத்து வேண்டுமானால் சலசலப்பு எழலாமே தவிர, ஒருத்தர் காரில் வந்து இறங்குவதாலேயே கட்சிக்குள் எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை.. "நின்று பேசுவது" செயல்பாடுகள் மட்டுமே.. அதில்தான் எடப்பாடியார் என்றுமே உயர்ந்து நிற்கிறார்.. என்கிறார்கள்.