செம ஃபார்மில் எடப்பாடியார்.. ஜெ. ஸ்டைலில் அதிரடிகள்.. அனல் பேச்சுக்கள்.. மவுன புன்னகையுடன் திமுக!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக ஸ்டாலினை விமர்சித்து பேசியுள்ளார்
சென்னை: முதல்வர் செம ஃபார்மில் உள்ளார்.. அவரது பேச்சு, செயல்பாடு, பிளான்கள், அதிரடிகள் என ஒவ்வொன்றும் திமுகவை திக்குமுக்காட செய்து வருகின்றன என்று சொல்லப்படுகிறது!
ஜெயலலிதா இப்படித்தான் இருந்தார்.. அவரது அறிக்கைகூட அதிர வைக்கும்.. பொதுக்கூட்டமோ, சட்டமன்ற பேச்சோ எதுவாக இருந்தாலும் பாயின்ட் பாயின்ட்டாக எடுத்து வைத்து பேசுவார்.
கருணாநிதி எந்த அளவுக்கு விவரமாக பேசுவாரோ, அதே அளவுக்கு புள்ளிவிவரங்களுடன் தகவல்களை அள்ளி தந்து திணற வைப்பார்.. குறிப்பாக ஜெயலலிதாவின் ஆவேச பேச்சினை சட்டமன்றத்தில்தான் நாம் நிறைய பார்க்க முடிந்தது. ஜெயலலிதா கோபமாகவோ, ஆவேசமாகவோ பேசுகிறார் என்றாலே அன்றைய தமிழக அரசியல் பெரும் பரபரப்பில் உள்ளதாகவே கருதப்படும்.
எடப்பாடியார்
இப்போது நீண்ட காலத்துக்கு பிறகு, அதிமுக தரப்பில் ஆவேச பேச்சு கிளர்ந்து எழுந்தது.. அது எடப்பாடியாரிடமிருந்துதான்.. ஜெயலலிதா பாணியிலான அந்த பேச்சின் சலசலப்புதான் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்ட திருத்தம் சம்பந்தமாக, திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியிருந்ததுடன், அமைதியாக இருக்கிற மாநிலத்தில் குந்தகம் விளைவிக்கிறீர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தது, அக்கட்சிக்கு ஒரு மைனஸாகவே பார்க்கப்படுகிறது. ஒருவேளை அப்போது அவையில் இருந்த திமுக மூத்த தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட யாரேனும் இதற்கு உடனடி பதில் தந்திருந்தால் சற்று நன்றாகவே இருந்திருக்கும்.
திமுக எம்பிக்கள்
ஏனென்றால் டெல்லியில் திமுக எம்பிக்கள் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான குரலை ஆவேசமாக எழுப்பி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்... அப்படி ஒரு கொந்தளிப்பு திமுக தரப்பில் சட்டமன்றத்தில் ஏன் இல்லாமல் போனது என்றுதான் கேள்வி எழுப்பப்படுகிறது. அது மட்டுமல்லாமல், முதல்வர் தன்னுடைய ஒவ்வொரு மேடைப்பேச்சிலும் திமுகவை அளவுக்கு அதிகமாக வாரி விமர்சனம் செய்தே பேச ஆரம்பித்துள்ளார்.
குட்டி கதை
குறிப்பாக, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் "எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து மக்கள் தோல்வியையே தருவார்கள்" என்று திமுகவை சாடி சொன்ன குட்டிக்கதை யாருமே எதிர்பாராதது... "இன்னும் ஒன்றே கால் வருஷத்துக்கு அதிமுக ஆட்சிதான்.. அடுத்தும் அம்மாவின் ஆட்சிதான்.. ஸ்டாலின் என்ன ஆட்சிக்கா வரப்போகிறார்" என்று முதல்வர் சிரித்தபடி தந்த பேட்டி திமுக தரப்பை கொதிக்க வைத்துள்ளதாம்.
அறுவடை
"விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர் ஸ்டாலின்... விவசாயத்தைப் பற்றித் தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது தமிழ்நாட்டில்தான்... ஈரோட்டில் கான்கிரீட் சாலை அமைத்து, அழுக்குப் படக்கூடாது என்பதற்காகக் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு கரும்புத் தோட்டத்தை அவர் பார்வையிடுகிறார்.. நானும்தான் நெல் வயலில் அறுவடை செய்தேன். அந்த போட்டோக்கள் கூட ஊடகங்களில் வெளியாகின... ஸ்டாலின் மாதிரியா போனேன்.. என்னுடைய கை மண்வெட்டி பிடித்த கை... இந்த கால் சேற்றை மிதித்த கால்... " என்று உச்சக்கட்டமாக விமர்சித்து, அது பற்றிய போட்டோவையும் எடுத்து காட்டுகிறார் முதல்வர்.
டிரம்ப் விருந்து
இதுஎல்லாவற்றிற்கும் மேலாக, "அம்மா" பிறந்த நாள் என்று டெல்லியில் டிரம்புக்கு அளிக்கும் விருந்தில்கூட எடப்பாடியார் கலந்து கொள்ளவில்லை என்று ஓபனாகவே சொல்லிவிட்டார்.. டிரம்ப், மோடியை விட ஜெயலலிதாவே தனக்கு முக்கியம் என்று எடப்பாடியார் நேற்று செயலில் காட்டியது ரத்தத்தின் ரத்தங்களுக்கு பெருத்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திவிட்டது.
பதிலடிகள்
முதல்வரின் சமீபகால பேச்சுக்களும், பதிலடிகளும், பேட்டிகளும், ஒரே சமயத்தில், அதிமுகவினரை உற்சாகப்படுத்தியும், திமுகவினரை திணற வைத்தும் வருகிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால் திமுக தரப்பிலோ நமட்டுச் சிரிப்புடன் இதை கடந்து செல்கின்றனர்.. அப்படியானால் மெகா பிளான் ஏதாவது திமுக தரப்பில் வைத்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.!