எல்லோருக்கும் உண்டு ரூ.2000.. அந்த கட்சி, இந்த கட்சி என்ற பாகுபாடு இல்லை.. முதல்வர் பழனிசாமி!
ரூ.2000 திட்டம் அறிவிப்பு குறித்து சட்டசபையில் முதல்வர் விளக்கம் அளித்தார்.
Recommended Video
சென்னை: அனைத்து தொழிலாளர்களுக்கும் உதவி கிடைக்கும் வகையிலேயே ரூ.2000 என்கிற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், தேர்தலுக்காக இதை அறிவிக்கவில்லை என்றும் தமிழக முதல்வர் சட்டசபையில் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2000 என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்திருந்தனர்.
நிழல் பட்ஜெட்
இந்நிலையில் இன்று நடைபெற்ற தமிழக பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக சார்பாக பொன்முடி பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இதன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது நிழல் பட்ஜெட் என்பதும், முதலமைச்சர் வெளியிட்டது நிஜ பட்ஜெட் என்றும் தெரியவருகிறது" என்றார்.
நிஜமான பட்ஜெட்
இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "நாங்கள் அறிவிப்பது பட்ஜெட் நிஜம் என்பதால் தான் திரும்பவும் எங்களை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். உங்கள் ஆட்சியின்போது நீங்கள் அறிவித்ததுதான் நிழல் பட்ஜெட், எங்களுடையது நிஜபட்ஜெட்" என்றார்.
ஏழை தொழிலாளர்கள்
இதையடுத்து 2000 ரூபாய் சம்பந்தமாக பொன்முடி கூறிய குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "கஜா புயலால் எத்தனையோ ஏழைகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களை எல்லாம் மனதில் வைத்துதான், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே குறிப்பாக ஏழை தொழிலாளர்களுக்காகவே இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது.
ஏற்கவில்லையா?
நீங்கள் சொல்வது போல் தேர்தலுக்காக கிடையாது. இதனால் எல்லா தொழிலாளர்களுக்கும் உதவி கிடைக்கும். அந்த கட்சி, இந்த கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா தொழிலாளர்களுக்கும் இந்த ரூ.2000 உதவி கிடைக்கும். இந்த திட்டத்தை நீங்கள் ஏற்கவில்லையா? என்றார்.
ஏன் அறிவிக்கவில்லை?
அதற்கு பொன்முடி, "நான் இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. இதில் எனக்கு மாற்று கருத்தும் கிடையாது. ஆனால் 2 நாளுக்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்தபோது இதை ஏன் அறிவிக்கவில்லை என்றுதான் நாங்கள் கேட்கிறோம்" என்றார். இவ்வாறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது.