"கவர்ன்மென்ட் ஆர்டரா".. தனியாளாக தெறிக்கவிட்ட செந்தில்குமார்.. ஆனால் நச்சுனு பதிலடி கொடுத்த முதல்வர்
எம்பி செந்தில்குமாரை தடுத்து நிறுத்தியது ஏன் என்று முதல்வர் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: "கவர்ன்மென்ட் ஆர்டரா.. அப்படின்னா அந்த ஆர்டரை காட்டுங்க .. இல்லாட்டி எனக்கு வழியை விடுங்க" என்று நடுரோட்டில் ஒத்த ஆளாக மொத்த போலீசாரையும் கதற விட்ட எம்பி செந்தில்குமாரின் வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.. இந்நிலையில், "அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் யாரையும் தடை செய்வது கிடையாது.. யார் வேண்டுமானாலும் வரலாம்... வரும்போது கொரோனா சர்ட்டிபிகேட் எடுத்து வந்தால்தான் அனுமதிக்க முடியும். நானும்தான் அந்த டெஸ்ட் செய்திருக்கேன்" என்று திமுக எம்பி தடுத்து நிறுத்திய விவகாரம் குறித்து முதல்வர் விளக்கம் தந்துள்ளார்.
நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது... அது தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் பற்றினதுதான்.. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முதல்வர் நேரடியாகவே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்டத்துக்கு நேற்று சென்று ஆய்வு நடத்தி, கலெக்டர், அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள எம்பி செந்தில்குமார் சென்றார்.. ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பீகார் சட்டசபை தேர்தல்...பிரச்சாரத்துக்கு ஓகே.. ஆன்லைன் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் வெளியீடு!!
எம்பி செந்தில்குமார்
இதனால் ஷாக் ஆன எம்பி, மக்கள் பிரதிநிதி ஒருவரை, முதல்வர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில் நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்காதது ஏன்? என்று அங்கிருந்த போலீசாரிடம் கேட்டார்.. முதலில் இங்கிலீஷில் கேட்டார்.. பிறகு தமிழிலும் கேட்டார்.. ஆனால் சரியான பதில் காவல்துறை தரப்பில் சொல்லவில்லை என தெரிகிறது. அதனால் மறுபடியும் மறுபடியும் போலீசாரிடம் இதே கேள்வியை எம்பி கேட்டு கொண்டே இருந்தார்.
அனுமதி
பாப்பிரெட்டிபட்டு எம்எல்ஏ, ஆரூர் எம்எல்ஏ இவங்களுக்கு எல்லாம் பெர்மிஷன் தரும்போது, ஒரு எம்பியான என்னை ஏன் அனுமதிக்க கூடாது? என்னை ஏன் தடுத்து நிறுத்தறீங்க? காரணம் சொல்லுங்க. என்று கேட்டார். உடனே போலீசார், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கொரோனா டெஸ்ட் மேற்கொண்டு நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.
வாக்குவாதம்
அதற்கு செந்தில்குமார், இது உங்க தனிப்பட்ட உத்தரவா? கவர்ன்மென்ட் ஆர்டரா? ஒருவேளை அது கவர்ன்மென்ட் ஆர்டர்ன்னா அதை எனக்கு காட்டுங்க.. இல்லாட்டி எனக்கு வழியை விடுங்க.. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், எட்டு வழிச் சாலை இது தொடர்பாக எல்லாம் முதல்வரை சந்தித்து மனு தரணும் என்றார். அப்போதும் போலீசார் விடவில்லை.
காரசார கேள்வி
பல போலீசார் சூழ்ந்து நிற்க, நட்ட நடுரோட்டில் செந்தில்குமாரின் இந்த காரசார வாக்குவாதத்தை கண்டு பொதுமக்கள் உறைந்து நின்றனர்.. அந்த பகுதியே பரபரப்பாகிவிட்டது. தனி ஒருவராகவே அத்தனை போலீசாரையும் பார்த்து கேள்விகளையும் கேட்டு கொண்டு நின்றார் எம்பி.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வைரலாக வலம் வருகிறது.
குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் எம்பி பேசும்போது, எனக்கு இது முன்னாடியே தெரிந்திருந்தால் கொரோனா ரிப்போர்ட்டுடனேயே வந்திருப்பேன், இதெல்லாம் கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்யும் வேலை என்று குற்றம் சாட்டினார். இதற்கு திமுக தலைவரும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
விளக்கம்
இந்த நிலையில் இன்று முதல்வர் நாமக்கல்லுக்கு சென்றுள்ளார்.. அப்போது செய்தியாளர்கள் இந்த சம்பவம் பற்றி முதல்வரிடம் கேட்டனர்.. அதற்கு "அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும் யாரையும் தடை செய்வது கிடையாது... யார் வேண்டுமானாலும் வரலாம்... ஆனால் வரும்போது கொரோனா டெஸ்ட் செய்ததுக்கான சர்டிப்பிகேட்டை எடுத்துவந்தால் மட்டும்தான் அனுமதிக்க முடியும்... நானும் டெஸ்ட் செய்திருக்கேன்.. ஏன் என்றால், இங்குள்ள எல்லாருமே கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்... அவங்களுக்கு கொரோனா வந்தால் அந்த பணிகள் மொத்தமா ஸ்தம்பித்துவிடும் என்று விளக்கம் தந்துள்ளார்.