7.5% இடஒதுக்கீடு: ஆளுநரின் ஒப்புதல் இன்றி அரசாணை வெளியிட்டது ஏன்?.. முதல்வர் விளக்கம்
7.5சதவீத உள்ஒதுக்கீடு.. அரசாணை வெளியிட்டது குறித்து முதல்வர் விளக்கம் தந்துள்ளார்
சென்னை: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது" என்று முதல்வர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை.
இதையடுத்து, ஆளுநர் வேண்டுமென்றே இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவு எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளும் கருத்து தெரிவித்திருந்தனர்.
7.5% இடஒதுக்கீடு: ஆளுநர் இதுவரை ஒப்புதல் தரவில்லை.. அதிரடி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!
ஆனால் ஆளுநர் தரப்போ,அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று கூறியிருந்த நிலையில், இன்று மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. #NEETReservation pic.twitter.com/KIZGRlAxlo
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 29, 2020
ஆர்டிகிள் 162ஐ பயன்படுத்தி, கொள்கை முடிவெடுத்து இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. எனினும், ஆளுநரின் ஒப்புதலை பெறாமல் இந்த அரசாணை வெளியிட்டது குறித்து ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது. #NEETReservation" எனக் குறிப்பிட்டுள்ளார்.