"2 விஷயத்தை" அமித்ஷாவிடம் முன்வைத்த எடப்பாடியார்.. நல்லது நடக்குமா.. பலத்த எதிர்பார்ப்பு
அமித்ஷாவிடம் முதல்வர் தரப்பில் 2 கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது
சென்னை: மொத்தம் 2 விஷயங்கள் முதல்வர் தரப்பில் அமித்ஷாவிடம் முன்வைக்கப்பட, அந்த இரண்டிற்குமே நல்ல பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.. கிட்டத்தட்ட 75 நிமிஷம் இவர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அப்போது சீட் உடன்பாடு, சீட் பங்கீடு, சசிகலா விடுதலை பற்றின பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. பாஜக 60 சீட் கேட்டதற்கு 34 சீட்டுக்கு மேல் தர முடியாது என்று முதல்வர் தரப்பு சொல்லி உள்ளதாக தெரிகிறது.
2 விஷயங்கள்
எனினும் முதல்வரின் டெல்லி பயணம் 2 விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.. முதல்வர் அமித்ஷாவிடம் பேசும்போது, சசிகலாவின் வருகையை பற்றியே அதிகம் பேசினாராம்.. அதற்கு காரணம், அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவான சில குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன... யாரெல்லாம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசுகிறார்களோ, அவர்களை உடனடியாக கண்டித்து வருகிறாராம் எடப்பாடியார்.
சசிகலா
பாஜகவும் சசிகலா புராணத்தை பாடுவதால், சசிகலாவுக்கு ஆதரவான எந்த அரசியல் நடவடிக்கையையும் பாஜக மேற்கொள்ள வேண்டாம் என்று அமித்ஷாவிடம் முதல்வர் தரப்பு கேட்டு கொண்டதாம். ஆனாலும், அவருடன் இணைத்து தேர்தலை சந்தித்தால், திமுகவை வீழ்த்த முடியும் என்று அமித்ஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம்.. இதுதான் எடப்பாடியாருக்கு நெருடலை உண்டு பண்ணி உள்ளது.. அமித்ஷாவின் இந்த பேச்சை அவர் ஏற்று கொள்வாரா என்று தெரியவில்லை..
புதிய சிக்கல்
சசிகலா வந்தால், அதிமுகவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போய்விடுமோ என்று சந்தேகம் ஏற்கனவே உள்ள நிலையில், பாஜகவின் வலியுறுத்தல் முதல்வருக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் சூழலுக்கு வந்துள்ளது. சசிகலா அதிமுகவில் இணைய நேர்ந்தால், அதை எப்படி முதல்வர் எதிர்கொள்வார் என்பதும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்று.
வேட்பாளர் விவகாரம்
அடுத்ததாக, முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும்படி எடப்பாடி, அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.. ஆனால், முதல்வர் வேட்பாளர் குறித்து பாஜக தரப்பு இப்போது வரை இறுதி செய்யாமல் உள்ளது... சீட் விவகாரத்திலேயே உடன்பாடு எட்டப்படாததால், மறுபடியும் பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. சீட் விஷயத்தில் முடிவு வந்தால்தான், முதல்வர் வேட்பாளர் விவகாரத்துக்கும் ஒரு முடிவு கிட்டும்.. ஆனால், பாஜக அமைதியாக இருப்பதை பார்த்தால், கடைசி நேரத்தில் ஏதாவது குழப்பம் ஏற்படுத்திவிடுமோ என்று எடப்பாடியார் தரப்பு கருதுகிறதாம்.
இன்று சந்திப்பு
அதனால்தான் மீண்டும் மீண்டும் முதல்வர் வேட்பாளர் குறித்த பேச்சை வலியுறுத்தி உள்ளார். இன்று நடக்கும் பேச்சுவார்த்தையிலாவது சுமூக முடிவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. பிரதமருடனான சந்திப்பில் நிலுவை நிதி, நதிகள் இணைப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினாலும், சசிகலா பற்றியோ, அல்லது முதல்வர் வேட்பாளர் விவகாரம் பற்றியோ ஆலோசனை நடத்தப்படுமா? என்று இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.