எடப்பாடியாரின் "திடீர்" ஆவேசம்.. சசிகலா வந்ததும்.. இருக்கு, சரியான கச்சேரி காத்திருக்கு!
முதல்முறையாக சசிகலா குறித்து முதல்வர் பேட்டி தந்துள்ளார்
சென்னை: முதல்வர் எடப்பாடியார் முதல் முறையாக சசிகலா குறித்து வாய் திறந்து விட்டார். அவர் சொல்வதைப் பார்த்தால் சசிகலா வெளியே வந்ததும் அதிமுகவில் செம கலாட்டா காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
Recommended Video
ஜெயலலிதாவை நேரில் பார்த்திருப்பார்களோ இல்லையோ.. ஆனால் சசிகலாவை சந்திக்காமல் ஒரு அதிமுக நிர்வாகி கூட அக்கட்சியில் குப்பை கொட்டியிருக்க முடியாது. அப்படிப்பட்ட சக்தியாக திகழ்ந்தவர்தான் சசிகலா.
ஜெயலலிதாவால் நேரடியாக நிர்வாகியாக நியமிக்கப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்களே அதிமுகவில் அதிகம். ஏன் முதல்வர் பதவியில் தற்போது எடப்பாடியார் இருப்பதற்குக் கூட சசிகலாதானே காரணம். இதெல்லாம் வரலாறு. யாரும் மறைக்கவும் முடியாது.
சசிகலா அதிமுகவிலேயே இல்லை..சிறையில் இருந்து வந்தாலும் 100% இணைக்க வாய்ப்பில்லை - முதல்வர் உறுதி
உடையுமா?
இப்படிப்பட்ட சசிகலா தற்போது சிறையில் அடைபட்டிருக்கிறார்.. இதோ விரைவில் வெளியே வரவும் போகிறார்.. சசிகலா சிறைக்குப் போனபோது அதிமுக இரண்டாக இருந்தது.. அவர் சிறைக்குள் போனதும் இணைந்து விட்டது.. ஓபிஎஸ்ஸுக்கும் துணை முதல்வர் பதவி கிடைத்து அவரும் காலத்தை ஓட்டி விட்டார்.. இப்போது அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் தருவாயில் வெளியே வருகிறார் சசிகலா. எனவே அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்? மீண்டும் அதிமுக உடையுமா அல்லது சசிகலாவையும் தன்னுடன் அது சேர்த்துக் கொள்ளுமா என்ற பரபரப்பில் அனைவரும் உள்ளனர்.
எதிர்பார்ப்பு
சசிகலா சிறைக்குள் போனதும் தினகரன் உருவாக்கிய அமமுக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சமீப காலமாக அதிமுக தலைவர்கள் பலரும் சசிகலாவுக்கு ஆதரவாகவும் அதற்கு சிலர் எதிராகவும் பேசி வருகின்றனர். ஓபிஎஸ் கூட அண்ணன் தம்பி சண்டைதானே பேசித் தீர்ப்போம் என்று பேசி வைக்க அடடா சசிகலாவை அதிமுகவுடன் இணைக்கப் போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு பலமாகி விட்டது.
சசிகலா
ஒரு பக்கம் எடப்பாடியார் தரப்பு இதை ரசிக்கவில்லை என்றாலும் கூட சசிகலா வருகையை சிலர் விரும்பவே செய்கின்றனர்.. திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க சசிகலாவையும் இணைப்பதே நல்லது என்பது பலரின் ஆசையாக உள்ளது. கருத்தாக உள்ளது.. ஆனால் முதல்வர் இதுதொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
விடுதலை
இந்த நிலையில் இன்று முதல்வரே வாயை திறந்து பேசி விட்டார்.. அதுவும் டெல்லியில் வைத்து பலமான கருத்தை கூறியுள்ளார்.. சசிகலா விடுதலையாகி வந்தாலும் கூட அவர் அதிமுகவில் இணைய 100 சதவீத அளவுக்கு "வாய்ப்பே கிடையாது ராஜா" என்று கூறி விட்டார் முதல்வர். இது பல அதிர்ச்சி அலைகளை கட்சிக்குள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதரவு
சசிகலா ஆதரவு குரூப் அதிமுகவில் இன்னும் பலமாகவே உள்ளது. அவர் வெளியே வந்ததும் நிச்சயம் இந்த குரூப் சசிகலா பின்னால் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்புக்கு ஓபிஎஸ்ஸும் ஆதரவு தரக் கூடும் என்றே சொல்கிறார்கள். அப்படி வரும்போது கொங்கு மண்டல குரூப் எப்படி இதை சமாளிக்கும் என்ற கேள்வி எழுகிறது. முதல்வரின் பதில்தான் அதற்கான ரியாக்ஷனாக இருக்கக் கூடும். அதாவது சசிகலாவை வலுவாக இவர்கள் எதிர்ப்பார்கள் என்றே கருதப்படுகிறது.
முதல்வர்
முதல்வரின் பேச்சைப் பார்த்தால், சசிகலாவை சேர்க்க முடியாது என்று அவர் நேரடியாகவே அமித்ஷாவிடமும் கூட கூறியிருக்கலாம் என்றே தெரிகிறது. அப்படி அவர் உறுதியாக இருந்தால் நிச்சயம் வரும் நாட்களில் அதாவது சசிகலா விடுதலைக்குப் பின்னர் கண்டிப்பாக கலாட்டா காட்சிகள் அரங்கேறும் என்று சொல்கிறார்கள். கூவத்தூர் காலத்தை நோக்கி அதிமுக திரும்பிப் போகவும் வாய்ப்புகள் உண்டு.
ஆட்டம்
ஆக மொத்தத்தில் எடப்பாடியார் பேச்சு அதிமுகவின் வரும் நாட்களை எப்படி வைத்திருக்க போகிறது என்பதை ஓரளவு கணிக்க வைப்பதாகவே உள்ளது. எல்லாம் சசிகலா வந்த பிறகு அவர் செய்ய போகும் காரியங்களில்தான் அடங்கியுள்ளது. விடுதலையான பின்னர் நிச்சயம் அவர் ஜெயலலிதா சமாதிக்குப் போவார்.. முன்பு போல ஏதாவது சபதம் போடுவார்... போட்ட பிறகுதான் அவரது ஆட்டம் தொடங்கும்.. அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்!!