"மொதல்ல மீத்தேன், ஈத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்டது யாருங்க.. ஸ்டாலின்தானே போட்டார்".. முதல்வர் நறுக்
விவசாயத்தை பற்றி ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்னங்க தெரியும்? வேளாண் திட்டத்தை ஆதரிப்பதற்கு காரணமே, 3 சட்டங்களிலும் விவசாயிகளுக்குப் பயன் இருப்பதால்தானே.. டெல்டா பகுதியில் மீத்தேன், ஈத்தேன் எடுக்க யார் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது? ஸ்டாலின்தானே போட்டார்?" என்று கேள்வி மேல் கேள்வியாக எழுப்பி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கடந்த சில தினங்களாகவே, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபையிலும், தமிழகத்திலும் கொந்தளித்து வருகின்றனர்.
ஆனால், இந்த மசோதாவினால் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்று தமிழக முதல்வர் எடப்பாடியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்களின் எதிர்காலத்துக்கு இது நன்மை பயக்ககூடியது என்று உறுதி சொல்கிறார்.
கன்னியாகுமரி இடைத்தேர்தல்: வெற்றி பெறும் பாஜக வேட்பாளர் நிச்சயம் மத்திய அமைச்சராவார்.. எல். முருகன்
பழனிசாமி
இது சம்பந்தமாக விவாதங்கள் சோஷியல் மீடியாவிலும் பலமாக எழுந்து வருகின்றன. இந்நிலையில், ராமநாதபுரத்தில் இன்று ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாவது:
வேளாண் திட்டம்
"நான் விவசாயிதான்... எனக்கு விவசாயம் பற்றி நல்லாவே தெரியும். ஆனால், ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? வேளாண் திட்டத்தை ஆதரிப்பதற்கு காரணமே, அந்த 3 சட்டங்களிலும் விவசாயிகளுக்கு பயன் இருப்பதால்தான்... விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய எந்த திட்டத்தையும் ஆதரிப்போம். அதேசமயம், விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களுக்கு எங்கள் எதிர்ப்பையும் தெரிவிப்போம்.
மீத்தேன், ஈத்தேன்
அன்று, டெல்டா பகுதியில் மீத்தேன், ஈத்தேன் எடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது யாரு? ஸ்டாலின்தானே போட்டார்... ஆனால், முடித்து வைத்தது அதிமுக அரசு.. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து டெல்டா மக்களை பாதுகாத்து வருகிறது அதிமுக அரசு.. ஆனால், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களை கொண்டு வந்தவர் ஸ்டாலின்" என்றார் எடப்பாடியார்.
விளக்கம்
மாநிலங்களவையில் அதிமுக கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வேளாண் சட்டத்தை எதிர்த்து பேசியதற்காக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்ஆர் பாலசுப்ரமணியத்திடம் விளக்கம் கேட்க இருக்கிறோம்" என்று பதிலளித்தார்.
முருகன்
பின்னர், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் பாஜக கொடி விரைவில் பறக்கும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் சொல்லியுள்ளாரே என்று கேட்டதற்கு, "அப்படி சொல்வது அவருடைய விருப்பம். அதிமுக கொடி பறக்கும் என்பதுதான் எங்களின் நிலை... நிரந்தரமாக அதிமுக கொடிதான் பறக்கும்... கோட்டையில் அதிமுக கொடி பறக்காது.. தேசியக்கொடிதான் பறக்கும்... பாஜக கொடி பறக்கும் என்றால் அதை முருகனிடம்தான் கேட்கவேண்டும்" என்றார் முதல்வர்.