சாட்டையை கையில் எடுத்த முதல்வர்.. 144 தடை உத்தரவை மீறினால்.. கடும் நடவடிக்கை.. வார்னிங்!
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை என முதல்வர் எச்சரித்துள்ளார்
சென்னை: வேறு வழியில்லை... தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கண்ணுக்கு தெரியாமல் நெருங்கி தாக்கும் பேராபத்தை உடையதுதான் கொரோனாவைரஸ்.. இந்த பெரும் சவாலை நம் சுகாதார துறை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால்தான் தடுப்பு நடவடிக்கையை அரசு கையில் எடுத்தது.. அதற்காகத்தான் ஒரே வழி ஊரடங்கு என்ற முடிவுக்கும் வந்து அதனை அமலபடுத்தியது.
ஆனால் இந்த வைரஸின் அபாயத்தை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.. எல்லாருமே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தினமும் எச்சரித்தபடியே உள்ளது.. ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்து வருவது கடுமையான அதிருப்தியை தந்து வருகிறது.
வார்னிங்
சமூக விலகல் சில இடங்களில் சுத்தமாக கடைபிடிக்கவும் இல்லை.. வைரஸ் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதால் முதல்வர் இப்போது இதுகுறித்து வார்னிங் தந்துள்ளார். இன்று வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாம்களை தல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தார்.. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது சொன்னதாவது:
சிகிச்சை
"பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ளது... தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு , மருத்துவ வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது.
வெளிமாநிலம்
தமிழகத்தில் மூன்று முகாம்களில் உள்ள தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன... மொத்தமாக வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை 1,18,336 ஆகும்... கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 3409 பேர், உணவகங்களில் 7,801 பேர், பண்ணைகளில் 4,953 பேர் என ஒட்டுமொத்தமாக 1,34,569 வெளி மாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
தொழிலாளர்கள்
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை 7, 198. அவர்களை பாதுகாக்க அந்தந்த மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலங்களில் இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்று தமிழக அரசு இந்த உதவிகளை செய்து கொடுத்துள்ளது.
அரசு ஊழியர்கள்
வீடுகளுக்கு டோக்கன் கொடுக்கும் போதே ரூ1,000 நிதி உதவியும் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ரூ3,000 உதவித் தொகை வழங்கப்படும்... தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் எதுவும் செய்யமாட்டோம்... குடும்ப அட்டை தாரர்களுக்கு டோக்கன் வழங்கும் போதே நிவாரணத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஏப்ரல் மாத இலவச ரேஷன் பொருட்களை இந்த மாத இறுதி வரை வாங்கிக்கொள்ளலாம்
சமூக இடைவெளி
அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வருவதற்கு எந்த தடையுமே கிடையாது.. அதே நேரத்தில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்... சிலர் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்கின்றனர். நோயின் தாக்கத்தை மக்கள் உணர வேண்டும்.... இதுவரை கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை... அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும்.
நடவடிக்கை
144 தடை உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது... 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்த அல்ல... மக்களைக் காக்கவே. ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம்... ஒவ்வொரு உயிரும் அரசு முக்கியம்... இதுவரை மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு, ஊரடங்கை மீறும்பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்... ஊரடங்கை தேவையில்லாமல் மீறினால், 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும், அரசுக்கு வேறு வழியில்லை" என்றார்.