ராமர் கோவில் பூமி பூஜை - ஆகஸ்ட் 5ல் அயோத்திக்கு செல்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் உலகின் மூன்றாவது பெரிய கோவிலாக இருக்கும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர். ராமர்கோவில் பூமி பூஜை விழா உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். 40 கிலோ எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட செங்கல் மூலம் பூமி பூஜை நடைபெற உள்ளது. அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத். இந்த விழாவில் 250 பேர் வரை மட்டுமே பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தின் நேரடி வழிகாட்டுதலின்படி விழா அழைப்பிதழ்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது.
ஜெயலலிதா இருந்த வரைக்கும் ராமர்கோவில் விசயத்தில் ஒதுங்கியே இருந்தார் காரணம் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை மனதில் வைத்துதான். அதே போல தற்போது ஆளும் அரசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரதமர் மோடி முதல் உதயநிதி வரை பிறந்த நாளில் வாழ்த்து... நன்றி சொன்ன டாக்டர் ராமதாஸ்
சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் மும்முரமாக இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில் மத ரீதியான விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பாரா? அல்லது ஏதாவது காரணம் சொல்லி ஒதுக்கிக்கொள்வாரா என்று அதிமுகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அதை காரணம் காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றாலும் பிரதமரும் பங்கேற்கும் விழா என்பதால் முதல்வர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றும் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.