அசராத எடப்பாடியார்.. 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு?.. அப்ப பாஜக கேட்ட 60 சீட்?
அதிமுக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட வியூகம் அமைத்து வருகிறது
சென்னை: என்னதான் பாஜக நூல் விட்டாலும், சீட் பேரத்தில் மட்டும் அசரவே கூடாது என்று எடப்பாடியார் தரப்பு முடிவு செய்துள்ளதாம்.. கூட்டணி, சாதி கட்சிகளுக்கு போக, மிச்சமிருக்கிற 150 தொகுதிகளில் ஜெ.பாணியில் தேர்தலை சந்திக்கவும் அதிமுக தயாராகி வருகிறதாம்.. இது பாஜகவை மட்டுமல்ல, திமுக, டிடிவி தினகரன் தரப்பு உள்ளிட்டோருக்கும் எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது!
கடந்த 2009ம் ஆண்டு எம்பி தேர்தலில் ஜெயலலிதாவின் தில் பார்த்து தமிழகமே மிரண்டுவிட்டது... திமுக - காங்கரசுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைத்தார்.. அந்த கூட்டணியில் அதிமுக, மதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள் இடம் பெற்றிருந்தன.
அதில் பாமக மட்டும் 6 சீட் தந்தார்.. அதேபோல மதிமுகவுக்கு 4 சீட் ஒதுக்கினார்.. 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சேர்த்து 6 தொகுதிகளை மட்டுமே தந்து, மீதமிருந்த 23 தொகுதிகளிலும் கெத்தாக களமிறங்கியது அதிமுக.
அசராத எடப்பாடியார்.. 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு?.. அப்ப பாஜக கேட்ட 60 சீட்?
திமுக
இப்படி ஒரு கூட்டணிக்கு முந்தைய நிலைமைதான், அதாவது 2004 தேர்தலில் 40-க்கு40 வெற்றி என்ற நிலைமையில் திமுக இருந்தது.. இந்த முறையும் திமுகவை வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே, துணிச்சலுடன் களமிறங்கி, மாஸ் வெற்றியும் பெற்றார். அதோடு சரி, திமுக வீழ்ச்சி என்ற புள்ளியை அப்போதுமுதல் சந்திக்க தொடங்கிவிட்டது.
அஸ்திரம்
இதையேதான் கடந்த முறை எம்பி தேர்தலிலும் எடப்பாடி கையாண்டார்.. எத்தனையோ பரபரப்பு, சர்ச்சை, புகார்கள், வழக்குகள், உட்கட்சி பூசல்களுக்கு இடையே எம்பி தேர்தலை ஜெ.இல்லாமல் அதிமுக சந்தித்தது.. அன்று திமுகவை வீழ்த்த ஜெ. எடுத்த அஸ்திரத்தையே எடப்பாடியாரும் எடுத்தார்.. மத்தியில் ஆளும் கட்சி என்றும் பார்க்காமல், கூட்டணியில் இருக்கிறதே என்றும் பார்க்காமல், ஏகப்பட்ட புகார்களை அதிமுக தரப்பில் இருந்தாலும், அவைகளை பற்றியும் கவலைப்படாமல், வெறும் 5 சீட்களை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கினார் எடப்பாடி.. அப்போதே பாஜக அப்செட் என்றுதான் சொல்ல வேண்டும்.. அப்போதிருந்தே புகைச்சல் ஆரம்பமானது என்பதையும் பல நிகழ்வுகள் நடந்து வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
வியூகங்கள்
இப்போதும் அதே ஜெ. பாணியைதான் கையில் எடுக்கிறார் எடப்பாடி.. தேர்தலுக்கான வியூகங்களும், கூட்டணி பேச்சும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. கூட்டணியில் உள்ள எல்.முருகனே சீட் பேரத்தையும் துவக்கி வைத்துள்ளார்.. 60 சீட் கேட்டிருக்கிறார்.. தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதாக சொல்லி, இப்படி 60 சீட்டுக்கு நூல் விட்டுள்ளார்... கூடவே வழக்கு போட வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ளவர்கள்மீதுதான் போட வேண்டும் என்று உள்குத்துவுடன் பதில் ஒன்றையும் செய்தியாளர்களிடம் சொன்னார்.
கூட்டணி
ஆனால், அதிமுக இப்போதுவரை அசரவில்லையாம்.. அதாவது பாஜகவுக்கு எடப்பாடியார் பணிய போவதில்லை என்றே சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட 150 சீட் வரை தனக்கு வைத்துக் கொண்டு மிச்சத்தைத்தான் கூட்டணி கட்சிகளுக்குத் தர முடிவு செய்துள்ளதாம்.
டாக்டர் ராமதாஸ்
அப்படி கூட்டணி கட்சிகள் என்றால், இந்த முறையும் பாமகவுக்கே முதலிடமும், முன்னுரிமையும் அளிக்கும் என்றே தெரிகிறது.. இன்னும் ஓபனாக சொல்ல போனால், பாமக, தேமுதிக, ஜாதிக் கட்சிகளுக்கு முன்னிலை கொடுத்துவிட்டு, அதற்கு அடுத்ததாகவே பாஜகவுக்கு சீட் ஒதுக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஏற்கனவே புகைச்சல் ஓவராக உள்ள நிலையில், இந்த முறையும் பாஜகவுக்கு அதிமுக குறைவான முக்கியத்துவத்தையே தருமானால், நிச்சயம் கூட்டணியில் விரிசல் வரும் என்பதில் மாற்று கருத்தில்லை!
வாக்குகள்
ஆனால், எடப்பாடியாரின் வியூகங்களை கண்டு சொந்தக்கட்சிகாரர்களே அசந்து போய்வருகிறார்களாம்.. இதில் இன்னொன்றையும் சொல்கிறார்கள், கூட்டணி கட்சிகளை குறிப்பாக சாதிக்கட்சிகளின் வாக்குகள் தேவை என்பதால், 34 தொகுதிகளை அவைகளுக்கு ஒதுக்கிவிட்டு, மிச்சமிருக்கிற தொகுதிகளில் அதிமுகவே களமிறங்க தயாராக இருக்கிறதாம்.
வாக்கு சதவீதம்
பாஜகவை எந்த இடத்திலும் அதிமுக பெரிய அளவு முக்கியத்துவம் தரவில்லை என்பதையே இதுபோன்ற யூகங்கள் எடுத்து காட்டுகின்றன.. சென்ற முறையே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் குறைவான வாக்கு சதவீதத்தை பெற்றதாக அதிமுகவுக்கு ஒரு வருத்தம் உள்ளது.. 24 தொகுதிகளில் போட்டியிட்டு, 28 சதவீத ஓட்டுகளையே அதிமுக பெற்றது.
நம்பிக்கை
ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில், வெறும், 8 சதவீதம்தான் வாக்குகளை பெற முடிந்தது.. தனியாக நின்று, 30 முதல் 40 சதவீதம் வரை வாக்கு வங்கியை வலுப்படுத்தும் ஸ்திரம் தங்களுக்கு உள்ளது என்று அதிமுக நம்பினாலும், கூட்டணியில் பெரிசாக லாபம் இல்லை, அதிலும் பாஜகவினால் ஒரு லாபமும், வாக்கு சதவீதமும் உயர போவதில்லை என்று ஆழமாக நம்புகிறது.
கூட்டணி
அதனால் கொடுக்கிற சீட்டை பெற்றுக் கொள்ளும் நிலையில்தான் பாஜக உள்ளது.. ஒருவேளை இதற்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அக்கட்சியை கழட்டிவிட்டுவிட்டு, பாமகவுக்கே 25 சீட் தந்து குஷிப்படுத்தவும் அதிமுக தயாராக உள்ளதாம்.. பாஜகவுக்கே இந்த நிலை என்றால், நிச்சயம் தேமுதிகவும் கூட்டணியில் இடம்பெறுமா, ஒன்றாக வெளியேறுமா என தெரியவில்லை.
ஜெயலலிதா
அதனால் பாமகவுக்கு போக, கூட்டணிகளுக்கு ஒற்றை இலக்கத்தில் சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, குறைந்தபட்சம் 150 தொகுதிகளில், ஜெ.பாணியில் எடப்பாடியார் களமிறங்குவார் என்கிறார்கள்.. காலம் காலமாக பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கே எடப்பாடியார் ஒரு ஜெர்க் தருவதை ரத்தத்தின் ரத்தங்கள் பிரம்மிப்புடன் பார்த்து வருகிறார்கள்.!