அன்பானவர்.. அசராதவர்.. சொல்லி அடிப்பவர்.. பாஜக, திமுகவுக்கு செம டஃப் கொடுக்கும் எடப்பாடியார்!
எடப்பாடியார் பழனிசாமிக்கு அதிமுகவில் ஆதரவு கூடி வருகிறது
சென்னை: ஒரே நேரத்தில் எல்லா தரப்பு பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி மிளிர்ந்து வருவதாக கூறப்படுகிறது-. முக்கியமாக பாஜகவின் வேல் யாத்திரை முதல் திமுகவின் வியூகங்கள் வரை அனைத்தையுமே தவிடுபொடியாக்கிவிட்டு ஆட்சி வழிநடத்துகிறார் என்றும் சொல்லப்படுகின்றன.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே ஏகப்பட்ட உள்பூசல்கள் நிலவிவருவதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வருகின்றன.. அதை இரு தரப்புமே மறுத்து வந்தாலும், வேல் யாத்திரை விவகாரத்தில் அவை வெடித்து வெளியே வந்துவிட்டன..
பாஜக கொடியை கண்டாலே காவல்துறையினர் கைது செய்கிறார்கள் என்றும், அதிமுக-திமுகவுக்கு இடையே ரகசிய உறவு உள்ளதாகவும் பாஜகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதை பற்றி அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:
அனுமதி
"மத்திய அரசு ஏதாவது வரையறை தந்திருந்தால், அதை வேண்டுமானால் நாம் மாற்றலாம்.. ஆனால், அனுமதி இல்லாத ஒன்றுக்கு அனுமதி கேட்பது சரியாகாது.. வளர்ச்சியை இது எப்படி தடுப்பதாகும்? ஒரு கட்சி வளர்வதானால் எப்படி வேண்டுமானாலும் தன்னை வளர்த்து கொள்ளும்.. அப்படித்தான் அந்த கட்சி பெரியார், அம்பேத்கார், திருவள்ளுவர், என்று ஆரம்பித்து இன்று முருகக்கடவுள் வரை வியூகங்களை வைத்து முன்னெடுத்து வருகிறது.
சட்டம் ஒழுங்கு
அது அவர்கள் உரிமை.. நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசிடம் இருந்து ஒரு அனுமதியை இவர்கள் வாங்கி தர வேண்டியதுதானே? அதிமுகவும், திமுகவும் கூட்டு என்று எப்படி சொல்லலாம்? கொரோனாவும் பரவிவிடக்கூடாது, சட்டம் ஒழுங்கும் சிதைந்துவிடக்கூடாது... இதைதான் முதல்வர் கவனத்தில் வைத்துள்ளார்.. எல்லாவற்றிற்கும் மேலாக, கூட்டணி கட்சி வளர்ந்துவிடக்கூடாது என்று எப்படி நாங்கள் நினைப்போம்?
நடவடிக்கை
உண்மையிலேயே பாஜக வளர்ந்துவிடக்கூடாது என்றால், அவர்கள் யாத்திரை நடத்தப்போவதாக சொன்ன முன்தினமே இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்திருக்குமே? அல்லது திருத்தணி யாத்திரைக்கு பிறகாவது கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்குமே? இதில் எதுவுமே செய்யாதபோது, திமுகவுடன் தொடர்பு படுத்தி பேசுவதை ஏற்க முடியாது.. தமிழகத்தில் மத நல்லிணக்கமான அரசாங்கமாக உள்ளபோது, அதைதான் முதல்வர் கையாண்டு வருகிறார்" என்கின்றனர்.
பொறுப்பாளர்கள்
இந்த யாத்திரை விஷயத்தில் முதல்வர் அனுமதி மறுத்தது சரியேதான் என்று நடுநிலைவாதிகளும் முதல்வரை பாராட்டு தெரிவித்தபடியே உள்ளனர்.. இந்த விஷயத்தில் மட்டுமல்ல, சமீபகாலமாக முதல்வர் எடுத்து வரும் அனைத்து அதிரடிகளுமே மக்களை ஈர்த்து வருகின்றன என்றும், நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரித்து, அதற்கு அதிமுக நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமனம் செய்வதிலும் மிக நேர்த்தியாகவே முதல்வர் கையாண்டு வருகிறார் என்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கட்டுப்பாடு
ஒருபக்கம் சாமான்ய மக்களுடன் பழகுவது, மற்றொரு பக்கம் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஆளுமையை பலப்படுத்தி வருவது, இதனிடையில் எதிர்க்கட்சிகளை சமாளித்து, சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருப்பது என்று எல்லா பக்கமும் முதல்வர் டாப் கியர் போட்டு மேலே சென்று வருகிறார் என்றும் தெரிவிக்கிறார்கள்.. அதேசமயம், தேர்தலை முன்னிறுத்தியே செய்யப்படும் வெறும் அதிரடிகளாக மட்டுமே இதெல்லாம் இருந்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்தி வருகின்றனர்.