டெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. "விவசாயி" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா
டெல்லி சென்ற முதல்வர் விவசாயிகளை சந்தித்திருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது
சென்னை: என்ன இருந்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒரு எட்டு அங்கே போய் என்ன ஏதென்று விசாரித்து விட்டாவது வந்திருக்கலாமே.. டெல்லி வரை சென்றுவிட்டு விவசாயிகளை பார்க்காமல் வந்துவிட்டாரே என்ற வருத்த தொனிகள் எழ ஆரம்பித்துள்ளன.
டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.. இவர்களை சமாதானப்படுத்தவும், போராட்டத்தை முடிவுக்கு கொணடு வரவும் மத்திய அரசு முயன்று வருகிறது.. கோர்ட்டும் இந்த விஷயத்தில் தலையிட்டு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.. 2 நாட்கள் தங்கியிருந்தார்.
பிரதமர்
முதல்நாள் அமித்ஷாவையும், இரண்டாம் நாள் பிரதமரையும் சந்தித்து விட்டு வந்துள்ளார்.. அரசியல் காரணங்களுக்காக அல்லது அரசு முறை பயணமாக முதல்வர் டெல்லி சென்றார் என்றாலும்கூட, விவசாயிகளை சென்று சந்தித்திருக்கலாமே என்ற கேள்விகள் பரவலாக எழுகிறது. எடப்பாடியாரை பொறுத்தவரை, மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களுக்கு ஆதரவு தருபவர்.
சட்டங்கள்
விவசாயிகளை இந்த சட்டங்கள் பாதிக்காது என்றும், மசோதாக்களில் விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சங்களும் இல்லை என்றும் சொன்னவர்.. அதுமட்டுமல்ல, விவசாயி ஆகிய நான் உணர்ந்ததால்தான் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் போன்று விவசாயத்தை பற்றி அறியதாவன் நான் அல்ல என்றும் தெளிவுபடுத்தியவர்.
மசோதா
எனினும், டெல்லியில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தையும் தந்திருக்கலாம், அல்லது அந்த மசோதாவால் எந்த தீமையும் இல்லை என்ற தன் நிலைப்பாட்டையும் விளக்கி இருக்கலாமே என்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன.. இதுவரை அங்கு 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.. அந்த குளிரில் நடுங்கி போராடி கொண்டிருப்பவர்களில், பெரும்பாலானோர் வயசான தாத்தாக்களே ஆவர்.
தேர்தல்
தன்னை ஒரு விவசாயி என்று அடிக்கடி சொல்லும் முதல்வர், தன் இன மக்களை நேரில் சந்தித்து பேசியிருந்தாலோ, அல்லது ஆறுதல் சொல்லி இருந்தாலோ அவர்களுக்கு ஒரு தெம்பு கிடைத்திருக்கும். தமிழகத்திலும் இந்த தேர்தல் நேரத்தில் எடப்பாடியாருக்கு மவுசு கூடியிருக்குமே என்றும் சொல்லப்படுகிறது.. இது ஒன்றும் கட்டாயம் கிடையாது என்றாலும், நேரில் சென்றிருந்தால் அது பல வகைகளில் பாசிட்டிவ் விஷயங்களை கொண்டு வந்திருக்கும் என்பதே இதன் ஆழபொருள்!