வில்சனை இழந்து தவிக்கும் குடும்பம்.. ரூ. 1 கோடி நிவாரண நிதி.. அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி
வில்சன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம். முதல்வர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை செக் போஸ்ட்டில் எஸ்ஐ வில்சன் நேற்று முன்தினம் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இக்கொடூர கொலை சம்பந்தமாக, எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து முதல்வர், நேற்று சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில், "களியக்காவிளையில் எஸ்ஐ சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த காவல் எஸ்ஐ வில்சன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக வில்சனை கொன்றவர்கள் குறித்த துப்பு தந்தால் 2 லட்சம் சன்மானம் என்று கன்னியாகுமரி போலீஸார் அறிவித்துள்ளனர். அதேபோல, குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் 2 பேரின் தலைக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள மாநில டிஜிபி லோக்நாத் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.