போற இடமெல்லாம் 6 அடின்னு பேசாதீங்க.. கருணாநிதியை களங்கப்படுத்தாதீங்க.. ஸ்டாலினுக்கு முதல்வர் கொட்டு!
சென்னை: கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூலூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் இருந்தபடியே பேசுகையில் தமிழகம் முழுவதும் சிறு, குறு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட 65 ரூபாய் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்ட வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும். மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தந்தை என்றும் பாராமல் அவரது மரணம் குறித்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்.
அவர்கள் மெரினாவில் 6 அடி நிலம் கேட்டனர். நாங்கள் காமராஜர் சமாதி அருகே 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தோம். ஆனால் தற்போது 6 அடி இடம் தரவில்லை என செல்லும் இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்து வருகிறார்.
இது கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகும். எனவே அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.