முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் போலீசுக்கு கொரோனா.. பரபரப்பு
சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் ஒருவருக்கு வைரஸ் நோய் தொற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் அமைந்துள்ளது. முதல்வர் வீட்டு பாதுகாப்பு பிரிவில் சுழற்சி முறையில் ஆண் மற்றும் பெண் போலீசார் பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாதுகாப்பு பிரிவு பெண் போலீஸ்காரர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
பிற போலீசார்
இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறையில் சென்று உள்ளார். தற்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் பாதுகாப்பு பணியில் உள்ள பிற போலீஸ்காரர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர் இவர்.
விசாரிப்பு
எனவே இந்த போலீஸ் பெண்மணி அல்லது இவருடன் பணியாற்றிய போலீசார் முதல்வருடன் அருகாமையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சென்றிருந்தால் அது விபரீதங்களை ஏற்படுத்தும் என்ற அச்சத்தின் காரணமாக, அதுகுறித்த கோணத்திலும் அதிகாரிகள் விவரம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
சென்னை நிலவரம்
சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. புதன்கிழமையான நேற்று, அங்கு 324 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2328 ஆக உயர்ந்துள்ளது. எனவே, அது காவல்துறையினரையும் எளிதாக பாதிக்கிறது. அண்ணாநகர் டிசிபி முத்துசாமி கொரோனா தாக்கி, பிறகு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், முதல்வர் வீட்டு பெண் காவலருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.
உத்தவ் தாக்ரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்று ஏற்பட்டிருந்தது. இருப்பினும் முதல்வர் உத்தவ் தாக்ரே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக முதல்வருக்கும் அதுபோன்ற எந்த அச்சமும் தேவை இல்லை என்று கூறப்படுகிறது.