கடலூரை சூறையாடிய நிவர்... களத்திற்கு சென்று துயர் துடைத்த முதல்வர் பழனிச்சாமி
கடலூரில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
கடலூர்: நிவர் புயலால் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த பகுதிகளை முதல்வர் பழனிச்சாமி களத்திற்கே சென்று ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகள், மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதல்வர் நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிவர் புயல் நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. புயலின் தாக்கத்தினால் கடலூர் மாவட்டம் கடுமையாக சேதமடைந்துள்ளது. பல பகுதிகள் தனி தீவுகளாக மாறியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வாழை உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் மோசமாக சேதமடைந்துள்ளன. மனம்பாடி என்ற கிராமத்தில் சுமார் 200 ஏக்கர் நெல் பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
கடலூர் மாவட்டம், ரெட்டி சாவடி குமாரமங்கலத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விளைநிலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். புயலால் சேதமடைந்த வாழைத்தோப்புகளை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.
புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி விளக்கினார்.
அவருடன் அமைச்சர் அம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர் மற்றும் வேளாண் துறை செயலாளர் ஆகியோரும் உடன் சென்றனர். தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர், மருத்துவ வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும், பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். புயலால் சேதமடைந்த விசைப் படகுகளையும் அவர் பார்வையிட்டார். மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதல்வர் பழனிச்சாமி.