கே.பி.முனுசாமி இல்ல நிகழ்ச்சி... திடீரென புரோகிராமை மாற்றிய முதல்வர்
சென்னை: அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், சீனியர் நிர்வாகியுமான கே.பி.முனுசாமி இல்ல நிகழ்ச்சியை முதல்வர் திடீரென புறக்கணித்த விவகாரம் தான் அதிமுக வட்டாரத்தில் பேசு பொருளாக உள்ளது.
கே.பி.முனுசாமியின் பேத்தி பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது.
அதற்கான அழைப்பிதழில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்களை அச்சிட்டு அவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார் முனுசாமி.
செக் வைக்கும் பாஜக.. அதிருப்தியில் பாமக.. கூட்டணிக்குள் அதிகரிக்கும் உரசல்.. சிக்கலில் அதிமுக!
முனுசாமி இல்ல விழா
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மூத்த நிர்வாகியுமான கே.பி.முனுசாமியின் பேத்தி சுதர்ஷிணி பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி கடந்த 8-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. தனது செல்லப் பேத்தி பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்வதால் அந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்த திட்டமிட்டார் முனுசாமி.
அழைப்பிதழில் பெயர்
இதையடுத்து முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆகியோரின் பெயர்களை அழைப்பிதழில் அச்சடித்து அவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுத்திருந்தார் முனுசாமி. அழைப்பிதழ் பெறும் போது கூட வந்துவிடுகிறேன் என உறுதியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீரென தனது நிகழ்ச்சி நிரலை நேற்று முன் தினம் மாற்றிவிட்டார்.
கோவை பயணம்
தனது பேத்தி பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்யும் நிகழ்ச்சிக்கு முதல்வர் வந்துவிடுவார் என எதிர்பார்த்த முனுசாமிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 5 மணிக்க்கு எடப்பாடி பழனிசாமி விழா அரங்கிற்கு வருவார் என காத்திருந்த முனுசாமிக்கு அவர் 5.30 மணிக்கு கோவை விமானத்தில் ஏறிய தகவல் கிடைத்ததும் கொதித்து விட்டாராம்.
வருத்தம்
இதையடுத்து அதிமுக முன்னணி நிர்வாகிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசிய முனுசாமி, தனது ஆதங்கத்தை கொட்டியதுடன் எடப்பாடி தனது மனதில் என்ன தான் நினைக்கிறார் என வினவியுள்ளார்.