சென்னை ரூ.5க்கு மருத்துவம் பார்த்த திருவேங்கடம் வீரராகவன் காலமானார்- ஈபிஎஸ்,ஓபிஎஸ், ஸ்டாலின் இரங்கல்
சென்னை: சென்னை வியாசர்பாடியில் ரூ5 க்கு மருத்துவர் பார்த்த புகழ்பெற்ற மக்களின் டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை எருக்கஞ்சேரியிலும் வியாசர்பாடியிலும் 40 ஆண்டுகளாக ஏழைகளுக்காக மருத்துவர் பார்த்து வந்தவர் டாக்டர் திருவேங்கடம் வீரரராகவன். தமது நோயாளிகளிடம் ரூ5 மட்டுமே பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிர் பிரிந்தது. டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியில் ரூ.5-க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் வீரராகவன் காலமானார்
மருத்துவ சேவை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல்: 5 ரூபாய் டாக்டர் என்று அன்புடன் அழைக்கபட்ட டாக்டர் திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்ற திருவேங்கடம், இலவசமாக மருத்துவம் படித்ததாகவும் அதேபோல் தமது சேவையும் இருக்க வேண்டும் என நினைத்து மக்களிடம் முதலில் 2 ரூபாய்க்கு சிகிச்சை அளித்தார். பின்னர் ரூ5 க்கு சிகிச்சை அளித்தார்.
40 ஆண்டுகால சேவை
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிறந்த மருத்துவச் சேவையை வழங்கினார். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட இரங்கலில், 1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது இரங்கல் அறிக்கையில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்' திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.