பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு... விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி
சென்னை: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரையிலான 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கொடிவேரி விவசாய பெருங்குடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதோடு தமிழக அரசுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் 24,504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறக் கூடும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கொடிவேரி விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால் பகுதியில் உள்ள 24504 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் முதல் போக பாசனத்திற்கு 1.8.2020 முதல் 28.11.2020 வரை 120 நாட்களுக்கு 8812.80 மி.கன அடி தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
2021ம் ஆண்டு கமல்ஹாசனுக்குரியது.. ரஜினியும் இணைவார்.. மாற்றம் வரும்.. சொல்கிறார் சி.கே. குமாரவேல்
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.