உண்மைக்கு கிடைத்த வெற்றி... உற்சாகம் பொங்க முதலமைச்சர் பேச்சு
Recommended Video
சென்னை: விக்ரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கத்தை விட இன்று சற்று கூடுதல் உற்சாகமாக காணப்பட்டார்.
அதேபோல் செய்தியாளர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்து இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விக்கிரவாண்டியில் அதிமுக அபாரம்.. 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.. தொகுதியை இழந்தது திமுக
முதல்வர் வருகை
நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிமுகட்டில் உள்ளதால் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்திற்கு வருகை தந்தார். அங்கு குழுமியிருந்த தொண்டர்களுக்கு தன் கைபட லட்டு கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.
உற்சாக நடனம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமைக்கழகத்திற்கு வரும் தகவலறிந்து தி.நகர் தொகுதி எம்.எல்.எ. சத்யா தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோரை அங்கு கொண்டு வந்து குவித்து உற்சாக வரவேற்பு அளித்தார். குறுகிய லாயிட்ஸ் சாலையில் திரண்டு நின்ற அதிமுக தொண்டர்களால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
மகிழ்ச்சி
ஏற்கனவே தலைமைக்கழகத்தில் ஆஜராகியிருந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, முன்னாள் அமைச்சர் சரோஜா, மற்றும் மதுசூதனன் ஆகியோர் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் சுமார் 15 நிமிடம் பேசிக்கொண்டிருந்த முதல்வர், பின்னர் செய்தியாளர்களை அழைத்து சந்தித்தார்.
பெருமிதம்
இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றி வரும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் எனவும் உற்சாகம் பொங்கக் கூறினார். மேலும், இந்த வெற்றி தாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான் எனவும் தெரிவித்தார்.
நம்பவில்லை
திமுக பொய்யை மட்டும் தனது மூலதனமாக கொண்டு தேர்தலை சந்தித்ததாகவும், மக்கள் விழிப்புணர்வுடன் இருந்ததால் இந்த இடைத்தேர்தலில் திமுகவின் பொய்வாக்குறுதிகள் எடுபடவில்லை என்றும் விமர்சித்தார். அதிமுகவுக்கு வெற்றியை தேடி தந்த நாங்குநேரி, விக்ரவாண்டி மக்களுக்கு நன்றியை உரிதாக்கிக் கொள்வதாக தெரிவித்தார்.
தலைவர்களுக்கு நன்றி
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி என்றும், இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்காக கடுமையாக உழைத்த அனைத்துக்கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் உருகினார்.
முதல்வர் பதில்
அதிமுக பொதுக்குழு தள்ளிப்போட காரணம் என்ன என்று செய்தியாளர்கள் வினவியதை அடுத்து, அதிமுக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என அறிவித்தார். மேலும், தன்னால் எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக அளித்ததாகவும், ஸ்டாலின் போகிற போக்கில் பொய்யை அவிழ்த்து விட்டு வாக்குக் கேட்டதாகவும் விமர்சித்தார்.
நடவடிக்கை
திமுக நாளிதழான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளதே என செய்தியாளர்கள் வினவ, அதற்கு பதில் அளித்த முதல்வர், பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு முரசொலி அலுவலகம் கட்டப்பட்டதா என ஆராய்ந்து, அதில் உண்மையிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.