திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கீடு- சட்டசபையை கிடுகிடுக்க வைத்த எடப்பாடியாரின் உக்கிர ஆவேச குரல்!
சென்னை: தமிழக சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடர்ந்து குறுக்கிட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கத்தைவிட மிக ஆவேசமாக உக்கிரமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்.
அப்போது திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடர்ந்து குறுக்கீடு செய்தார். இதனால் கடும் கோபமடைந்த முதல்வர் எடப்பாடி, நான் பேசிகிட்டே இருக்கேன்.. இது என்னங்க அர்த்தம்? எப்ப பார்த்தாலும் எந்திரிச்சுட்டே இருங்க.. இது தவறுங்க.. என்னங்க அர்த்தம்... எப்ப பார்த்தாலும் பேசிகிட்டே இருக்கீங்க.. என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க நீங்க? என்று ஆவேசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து சபை நடவடிகைகளுக்கு இடையூறு விளைவிக்கும் ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இதனை ஏற்று இன்று ஒருநாள் சட்டசபை கூட்டத்தில் இருந்து ஆஸ்டினை வெளியேற்ற உத்தரவிடுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
பின்னர் திமுகவின் துரைமுருகன் விடுத்த கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை சபாநாயகர் ரத்து செய்து உத்தரவிட்டார்.