அரூர் சாலை விபத்து... பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு... முதல்வர் உத்தரவு
சென்னை: அரூர் பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையை அறிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அரூரில் அமைந்துள்ள சென்னை தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த கார் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவம் இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் பலத்த காயமடைந்தர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விபத்திற்குப் பின் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காயமடைந்தவர்களுக்கு உரியச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் மாட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்ச ரூபாயும் பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக வாகன ஒட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.