ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு முத்தான 5 திட்டங்களை சட்டசபையில் வெளியிட்டார் முதல்வர்
சென்னை: ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நலனுக்காக 5 புதிய திட்டங்களை தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. இதில் சட்டசபை விதி எண் 110இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறுகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயர்ந்த சேவையை நினைவுக்கூர அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை மாநில பெண் குழந்தைகள் நாளாக அனுசரிக்கப்படும். மேலும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நலனுக்காக 5 புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.
அரசு இல்லங்களில் வாழும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், 21 வயதை நிறைவு செய்யும் போது அவர்களுக்கு தலா ரூ 2 லட்சம் வீதம் அவர்களின் பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள இந்த நிதி உதவி செய்யும்.
பெற்றோர், பாதுகாவர் இல்லாத பெண் குழந்தைகள், 18 வயது முடிந்து அரசு குழந்தைகளை இல்லத்திலிருந்து வெளியே சென்ற பின்னர் அவர்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அரசே, தாய் தந்தை ஸ்தானத்திலிருந்து அவர்களின் சமூக பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு சிறப்பு உதவித் தொகுப்பினை வழங்கும். இந்த உதவித் தொகையில் மேற்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயத் தொழில் செய்தல் போன்றவை அடங்கும். அப்பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இந்த உதவிகள் அளிக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இல்லங்களில் ஆதரவற்ற, முற்றிலும் கைவிடப்பட்ட குழந்தைகள், நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்வதற்கு தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அக்குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் வளர்ப்பு பெற்றோர்களுக்கு தற்போது 3 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ 2000 வீதம் வழங்கப்படுகிறது. இத்தொகை மாத்ம ரூ 4 ரூபாயாக உயர்த்தி 5 ஆண்டுகளுக்கு வளர்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.
பெண் சிசு கொலைகளை தடுத்திட தொட்டில் குழந்தை திட்டத்தை நாட்டிலேயே முதல்முதலாக அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா. தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் மட்டும், குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தை காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றும் 3 மாவட்ட நிர்வாகிகளுக்கு முதல் மூன்று பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
சமூக பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள், மகளிர் காப்பகங்களில் உள்ள இல்லவாசிகளுக்கும் காப்பகங்களில் இருந்து பயிற்சி முடித்து வெளியேறிய இல்லவாசிகளுக்கும் சமூக பாதுகாப்புத் துறையில் சி மற்றும் டி பிரிவில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்குட்படாத காலிப்பணியிடங்களில் பணியமர்த்த அரசாணை உள்ளது.
அனைத்து குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் உள்ள முற்றிலும் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் சமூக நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எல்லைக்குட்படாத சி மற்றும் டி பிரிவில் வயது, கல்வி, பிற தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். இதை தவிர்த்து சத்துணவு திட்டம், அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும் தகுதிக்கேற்ப முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தப்படுவர் என முதல்வர் அறிவித்தார்.