ரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம்.. உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended Video
சென்னை: ரூ 15 கோடியில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்றும் உலமாக்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் கேள்வி நேரத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
ஹஜ் பயணிகள் தங்கி செல்வதற்காக அவர்களுக்கு ரூ 15 கோடி செலவில் புதிய ஹஜ் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ 1500-லிருந்து ரூ 3000-ஆக உயர்த்தப்படும். உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க ரூ 25 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார் முதல்வர்.
தற்போது சென்னையில் வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றும் வரும் நிலையில் அவர்களை கவரும் வகையில் முதல்வர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.