பரிசோதனை அதிகம் என்பதால் பாதிப்பு அதிகமாக தெரிகிறது.. மக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் பேச்சு
சென்னை: பரிசோதனை அதிகம் என்பதால் பாதிப்பு அதிகமாக தெரிகிறது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சென்னையில் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மக்கள் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு வீச்சில் பணிகள் நடைபெறுகின்றன. மூன்றாவது முறையாக லாக்டவுன் அமலில் இருந்தாலும் 40 நாட்கள் கழித்து ஒரு சில கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணை.. எடப்பாடியார் அதிரடி
முதல்வர்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜே ராதாகிருஷ்ணன், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிவிப்பதற்காக மாலை 6 மணிக்கு மாநில மக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா தடுப்பு பணியை ஒருங்கிணைக்க 12 உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மக்கள் நெருக்கம்
சென்னையில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா பணியை கவனிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இந்த நோய் அதிகரிக்க காரணம் சென்னையில் மக்கள் நெருக்கமாக வசிப்பது, இடங்கள், குறுகலான தெருக்கள்.
அச்சம் வேண்டாம்
மேலும் பொது கழிப்பறையை மக்கள் பயன்படுத்துவதும் நோய் பரவ காரணம் ஆகும். கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்று 11 ஆயிரம் பேர் பரிசோதனை செய்துக் கொள்கிறார்கள், இதனால்தான் நோயின் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம்.
முகக் கவசம்
பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும். ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ரேஷன் அட்டைதாரர்கள் எண்ணெய், பருப்பு, அரிசி, சர்க்கரை போன்றவற்றை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.