அடித்து தூக்கிய எடப்பாடியார்.. "மினி கிளினிக்"குகள் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார் முதல்வர்..!
மினி கிளினிக்குகளை இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: தமிழகத்தில், "மினி கிளினிக்"குகள் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் துவக்கி வைத்தார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டுதான் வருகிறது.. அதனால்தான் இந்தியாவிலும் லாக்டவுன்கள் பலமுறை போடப்பட்டு, அதில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.. எனினும் ஊரடங்கு ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா டெஸ்ட் அதிகரிக்கப்பட்டுள்ளது.. ஒரு நாளைக்கு சராசரியாக 85 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.. இதை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல்வர் எடப்பாடியார் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டமும் நடந்தது.
அந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகவே விவாதிக்கப்பட்டது... பிறகு தமிழ்நாட்டில் கொரோனா டெஸ்ட்டை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அந்த கூட்ட முடிவிலேயே அறிவித்தார்.
அதன்படியே, இன்று அந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னை ராயபுரம், வியாசர்பாடி மற்றும் மயிலாப்பூர் ஆகிய பகுதிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த மினி கிளினிக்குகளை தொடங்கி வைத்தார்.. இப்போதைக்கு சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது.
அதிலும் முதல்கட்டமாக 47 இடங்களில் கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது... இதில் 20 இடங்களில் இன்றே அவை செயல்படவும் ஆரம்பிக்கின்றன. இன்னும், 10 நாட்களில், மாநிலம் முழுதும், 2,000 மினி கிளினிக்குகள் செயல்பாட்டிற்கு வரும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
எல்லா தரப்பு மக்களுக்கும் எளிதில் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலேயே இந்த மினி கிளினிக்குகள் துவக்கப்பட உள்ளது.. இந்த மினி கிளினிக்கில், எம்பிபிஎஸ் முடித்த ஒரு டாக்டர், நர்ஸ், மருத்துவ பணியாளர் ஆகியோர் பணியில் இருப்பர். அதனால், சளி, காய்ச்சல், உடல் வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீர் பிரச்னை மற்றும் மகப்பேறு தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. மேலும், இ.சி.ஜி., பல்ஸ் ஆக்சிமீட்டர், தெர்மல் ஸ்கேனர் போன்ற மருத்துவ உபகரணங்களும் இருக்கும்.
வரும் 16-ந்தேதி அதாவது நாளை மறுநாள் சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்வர் திறந்து வைக்கிறார்.. இதனை தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள்... எப்படிடயும் இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.