தனியார் மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும்- முதல்வர்
சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு சட்டத்தை அதிமுக அரசு இயற்றியது.
இவ்வாண்டே, மொத்தம் 313 எம்பிபிஎஸ் இடங்களிலும் 92 பல் மருத்துவ இடங்களிலும் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று, மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு மாணவர்களுக்கான மருத்துவ கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும்- மு.க.ஸ்டாலின்
நகராட்சி பள்ளிகள்
அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் , பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை மற்றும் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாத வண்ணம், இச்செலவினங்களை வழங்குவதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை, இதர கல்வி உதவித் தொகை திட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்த உரிய உத்தரவை பிறப்பித்துள்ளேன் என கடந்த 18-ஆம் தேதி 7.5 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் நான் அறிவித்தேன்.
மருத்துவ கல்லூரி
கலந்தாய்வில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப் பெற்றுள்ள மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே இதனை நான் அறிவித்தேன். மேற்கண்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை உதவித் தொகை அனுமதி வரும் வரை காத்திராமல் உடனடியாக செலுத்தும் விதமாக, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன்.
விடுதி கட்டணம்
அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி கட்டணங்கள் போன்றவற்றை அதிமுக அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு செலுத்தும். அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு சம வாய்ப்பு அளித்து மருத்துவர் ஆகும் கனவை நனவாக்கி, சமநீதியை நிலைநாட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளது அதிமுக அரசு.
உதவி முழுமையாக கிடைக்கும்
நான் 18-ஆம் தேதியே அறிவித்தவாறு, அந்த மாணவர்களின் கல்வி மற்றும் விடுதி செலவுகளையும் ஏற்று அவர்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிவர். இவர்களுக்கு அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர் என முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.