சிலர் கட்சியே தொடங்காமல் பேசுகின்றனர்.. ரஜினியை மீண்டும் மீண்டும் வாரும் முதல்வர் பழனிச்சாமி
சென்னை: சிலர் கட்சியே தொடங்காமல் பேசுகின்றனர் என ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
ரஜினிகாந்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக விமர்சனம் செய்ததில்லை. பொதுவாக நடிகர்கள் என கூறி விமர்சனம் செய்திருப்பார். ஆனால் எப்போதும் அவர் தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என பேசினாரோ அன்று முதல் ரஜினியை விமர்சனம் செய்து வருகிறார்.
அத்துடன் கமல் நிகழ்ச்சியில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அமர்ந்ததே அற்புதம், அதிசயம் என்று கூறிய ரஜினிகாந்த், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 2021 இல் மிகப் பெரிய அதிசயத்தை அற்புதத்தை மக்கள் நிகழ்த்துவார்கள் என தெரிவித்திருந்தார்.
நடிகர்கள்
இதனால் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கிறார். 2021 இல் அதிமுக ஆட்சிக்கு வருவதுதான் ரஜினி கூறிய அதிசயம் என்றார். அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்கள் இதுவரை மக்களுக்கு என்ன செய்துவிட்டார்கள் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாடாளுமன்றம்
இந்த நிலையில் அதிமுக பொதுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமணம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் கூறுகையில் நாடாளுமன்ற தேர்தலில் சரிவை சந்தித்தோம். மக்கள் நாடாளுமன்றம் சட்டமன்றம் என பிரித்து பார்த்து வாக்களித்தனர்.
துணிச்சல்
மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சிக்கு வர வேண்டுமென தீர்மானிப்பதில் தமிழக மக்கள் சிறப்பானவர்கள். குறுகிய காலத்தில் கூட்டணி அமைந்தாலும் பிரசாரத்தில் நாம் ஈடுபடாததும் சரிவுக்கு காரணம் ஆகும். அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் துணிச்சல் தைரியம் ஸ்டாலினுக்கு இல்லை.
அதிமுக அரசு
அதனால்தான் அரசு ஊழியர்களை தூண்டிவிடுகிறார். கட்சியே தொடங்காமல் சிலர் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை. டிடிவி தினகரன், குடும்பத்தினர் அதிமுகவை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை என்றார் முதல்வர்.