முன்னாடி மாதிரி இல்லை.. "சுட சுட.. டக்டக்னு".. அடிச்சு தூக்கும் எடப்பாடியார்..விழி பிதுங்கும் திமுக!
வேகம் எடுத்து வருகிறது தமிழக முதல்வரின் பிரச்சாரங்கள்
சென்னை: முன்னாடி மாதிரி எல்லாம் இப்போ இல்லை.. திமுக தலைவர் எது பேசினாலும், அதற்கு
கவுண்ட்டர்களை சுடச்சுட தந்து திணற வைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. இதனால் திமுக தரப்பு திகைத்து போய் உள்ளதாம்..!
கொரோனா உச்சத்தில் இருந்த சமயம், இன்னும் 6 மாசம்தான்.. இன்னும் ஒரு மாசம்தான் என்று எடப்பாடியாருக்கு கெடு வைத்து கொண்டிருந்தார் முக ஸ்டாலின்.. நித்தம் ஒரு அறிக்கை.. நித்தம் ஒரு கேள்வி.. நித்தம் ஒரு விமர்சனம் என அதிமுக தலைமையை திணற வைத்து கொண்டிருந்தார்.. இந்த திணறலில் சிக்கி எடப்பாடியார் சற்று நிலைகுலைந்தும், கலங்கி போனதும் உண்மைதான்.
ஆனால், எல்லாமே ஒரு தற்காலிக பீதிதான்.. இப்போது அப்படி இல்லை.. தேர்தல் நெருங்கி கொண்டே வருவதால் அதிமுக அரசுக்கான அழுத்தம் கூடி கொண்டே வருகிறது..
பொறுப்புணர்வு
ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டுமே என்ற பொறுப்புணர்வும், திமுகவுக்கு டஃப் தர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும், கட்சிக்குள் நிலவும் பூசலை சரிக்கட்ட வேண்டிய சமாளிப்பும், கூட்டணிக்குள் நிலவும் குழப்பத்தை சீராக்க வேண்டிய கடமையும், சசிகலா போன்றோரால் ஏற்பட்டு வரும் அதிரடிகளை, கையாளும் பக்குவமும் என எடப்பாடியாருக்கு நாலாபக்கமும் பந்துகள் வந்து விழுகின்றன.. ஆனால், தன் மீது விழும் பந்துகள் அத்தனையையும் சிக்ஸராக்கி கொண்டிருக்கிறார் முதல்வர்.
குற்றச்சாட்டுகள்
அதில், குறிப்பிட்டு சொல்லும்படியாக உள்ளது அவரது பிரச்சாரம்தான்.. அதிமுக அரசுக்கு எதிராக தினமும் குற்றச்சாட்டுகளை சொல்லி வரும் திமுக தலைவருக்கு, உடனுக்குடன் பதிலடி தந்து வருகிறார்.இத்தனைக்கும் திமுகவில் மக்கள் கிராம சபை உட்பட பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளனர்.. இன்னும் இந்த 3 மாசத்துக்கு தேவையான பிளான்களையும் வகுத்து வருகின்றனர்..
பிரச்சாரம்
ஸ்டாலினின் பிரச்சார பயண திட்டங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.. ஆனால், இத்தனை இருந்தாலும் எடப்பாடியார் தன்னுடைய பிரச்சாரத்தை மட்டுமே நம்பி வருகிறார்.. மக்களை நேரடியாக சந்தித்து பேசினாலே, ஒரு புரிதல் தனக்கும் மக்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்.
சர்ச்சைகள்
அதுமட்டுமல்ல, ஸ்டாலின் நடத்தப்படும் கூட்டங்களில் சில சர்ச்சைகள் நடந்து வருகின்றன.. கோவை கிராம சபை கூட்டம், தேனி கிராம சபை கூட்டங்களில் பெண்கள் கேள்விகளை கேட்டு சலசலப்பை உண்டுபண்ணுவதால், அது சித்தரிக்கப்பட்ட ஒரு டிராமா என்றும் சலசலப்புகள் நிலவி வருகின்றன.. இதுபோன்ற ஒரு சலசலப்பைகூட முதல்வர் பிரச்சாரங்களில் காணப்படுவதில்லை என்பது ஒரு பிளஸ் பாயிண்ட்.
கமெண்ட்கள்
இங்கு இன்னொன்னையும் சொல்ல வேண்டி உள்ளது.. துண்டு சீட்டை வைத்து படிப்பவர் ஸ்டாலின் என்றும், அந்த துண்டை சீட்டையும் பார்த்தே படிக்கிறார் என்றும் சோஷியல் மீடியாவில் பல நெகட்டிவ் கமெண்ட்கள் வலம் வந்தபடியே உள்ளன.. ஆனால், எந்த பொதுக்கூட்டமாக இருந்தாலும், எடப்பாடியார் கையில் எந்தவித குறிப்பும் வைத்து கொள்ளாமல் பேசுகிறார்.. அதுவும் சரளமாக பேசுகிறார்.. முன்பெல்லாம் சாதாரணமாக பேசி கொண்டிருந்தவர் இப்போது புள்ளி விவரங்களுடன் கூடிய தகவல்களை சொல்லி வருவது மக்களை கவனிக்க வைத்து வருகிறது.
சவால்
"ஊழல் பற்றி விவாதிக்கலாமா? நான் ரெடி, நீங்க ரெடியா?" என்று திமுகவுக்கு சவால் விடுக்கிறார்.. "திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடி ஆட்சியாக மாறிவிடும்" என்று அடித்து சொல்கிறார்.. "பெண்களை இப்படி அவதூறாக உதயநிதி பேசிக்கொண்டு வருகிறாரே, அவரை ஏன் ஸ்டாலின் ஏன் கண்டிக்கவில்லை?" என்று கேள்வி எழுப்புகிறார்.. "மக்களை நேரடியாக போய் பார்க்காமல், மரத்தடியில் ஜமுக்காளத்தை விரித்து, அதன்மேல் உட்கார்ந்து கொண்டு குறை கேட்கிறேன் என்று நாடகமாடுகிறார்.. கையில் வேல் பிடித்து கொண்டு வேஷம் போடுகிறார்" என்று தொகுதிக்கு ஒரு கேள்வியை கேட்டு திமுகவை திணறடித்து வருகிறார்.
திமுக பதிலடி
மொத்தத்தில் "ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஒன்றுமே செய்ய முடியாது" என்பதை ஆணித்தரமாகவும் அழுத்தத்திருத்தமாகவும் எடப்பாடியார் சொல்லி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.. அதேசமயம், இதற்கெல்லாம் மாற்றாகவும், திருப்பி போட்டு சிக்ஸசர் அடிக்கவும் திமுக கோதாவில் அதிரடியாக குதித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.