வேன் மீது ஏறி நின்று சுட்டது யார்?.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு
தூத்துக்குடி சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டது
Recommended Video
சென்னை: "தூத்துக்குடியில் யாருமே வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தவில்லை.. இது ஒரு கற்பனை கதை" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார். இது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராமசாமி, சென்னை மெரினா பீச்சில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தார்.
மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினால் அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற மரபு உள்ளதை நன்கு அறிந்தவர் ராமசாமி.
நடைமுறைகள்
அதனால், "வேன் மீது ஏறி நின்று போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்? ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமானால் அதற்கு எத்தனையோ நடைமுறைகள் உள்ளன. அப்படி இருக்கும்போது, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது எவ்வாறு? அவ்வாறு இருக்கும்போது, இத்தனை உயிர் இழப்புகள் ஏற்பட்டுள்ளதே" என்றார்.
கற்பனை
இதற்கு முதல்வர் பழனிசாமி பதில் அளிக்கும்போது, "வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை. அவ்வாறு வேன் மீது ஏறி நின்று துப்பாக்கி சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனை கதையே. இந்த விவகாரம் தொடர்பாக ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் முடிவில்தான் அனைத்தும் தெரியவரும்" என்றார்.
மஞ்சள் டி-ஷர்ட்
துப்பாக்கி சூடு என்றாலே மஞ்சள் டி-ஷர்ட் போட்ட ஒருவர் வேன் மீது ஏறி நின்று, மனித உயிர்களுக்கு குறி வைக்கும் அந்த போட்டோதான் நம் கண் முன்னே வந்து நிற்கிறது. இந்த போட்டோதான் மிகப்பெரிய வைரலாகி தூத்துக்குடியையே திரும்பி பார்க்க வைத்தது. அப்படி இருக்கும்போது, முதல்வர் வேன் மீது ஏறி நின்று யாருமே துப்பாக்கி சூடு நடத்தவில்லை, அது ஒரு கற்பனை என்று சொல்லி இருப்பது மிகப்பெரிய விவாத பொருளாக தற்போது மாறியுள்ளது.
மறுப்பு
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ராமசாமி அளித்த ஒரு பேட்டியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காவல்துறையின் விதி மீறலை ஏற்க மறுத்துள்ளார். அதை ஒப்புக் கொள்ளும் தைரியம் அவருக்கு இல்லை. அதன் வெளிப்பாடே அவரது இன்றைய சட்டசபை பேச்சு என்று கூறியுள்ளார். முதல்வரின் இந்தப் பேச்சால் தற்போது புதிய சலசலப்பும், விவாதமும் எழுந்துள்ளது.