ஓபிஎஸ் கூலாதான் இருக்காராம்.. எடப்பாடி தரப்புக்குதான் ஏகப்பட்ட யோசனை.. ஏன் தெரியுமா?
சென்னை: அதிமுகவில் நடக்கும் குழப்பங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் நெருக்கடியை தந்திருப்பதாக பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், அவரை விடவும் அதிகமாக பல விஷயங்களை யோசிக்க வேண்டிய இடத்தில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமிதான் என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.
அதிமுகவில் அணிகள் இணைப்பு நடந்த பிறகு, படிப்படியாக ஓ.பன்னீர் செல்வம் செல்வாக்கு குறைந்து கொண்டுதான் இருக்கிறது. மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து இடங்களிலும் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் என எங்கு சென்றாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனி மரியாதை. அமைச்சர் பதவிகள் கட்சி நிர்வாகிகள் என பல மட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மிக அதிகம்.
"எது நடந்ததோ".. ஓபிஎஸ் உதிர்த்த தத்துவம்.. ஆனால் மக்கள் மனசுல என்ன இருக்கு தெரியுமா.. விறுவிறு சர்வே
ஒற்றைத் தலைமைதான்
எம்ஜிஆர், அதன்பிறகு ஜெயலலிதா, என ஒற்றை தலைமைகளின் கீழ் இருந்த அதிமுக.. இரட்டை தலைமையின் கீழ் எப்படி பயணிக்க போகிறது என்ற சந்தேகம் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இணைந்தபோது பலருக்கும் இருந்தது. ஆனால், பெயர்தான் இரட்டை தலைமை. கிட்டத்தட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இப்போது அதிமுக ஒற்றைத் தலைமையின்கீழ் இயங்குவது போன்ற தோற்றம்தான் கடந்த பல மாதங்களாக உருவாகிவிட்டது.
வழிகாட்டு குழு
இதையெல்லாம் அறிந்துதான், கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியில் வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக கூறிவிட்டார் பன்னீர்செல்வம். 11 பேர் இந்த குழுவில் இருப்பார்கள். இந்த குழு கொடுக்கும் பரிந்துரை அடிப்படையில்தான் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, கட்சி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களும் நடைபெறும். இதில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட சரிசமமாக இருப்பார்கள்.
இரு பக்க அழுத்தம்
இவ்வாறு வழிகாட்டு குழுவை அமைக்க ஒப்புக் கொண்டால், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகிக் கொள்ள பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறாராம். அந்த வகையில் பன்னீர்செல்வம் அதிகமாக குழம்ப தேவை கிடையாது. அவருக்கு இருப்பது ஒற்றைக் குறிக்கோள் மட்டும் தான். ஆனால் அவரை விட அதிகமான அழுத்தத்தில் இருக்கக்கூடியது எடப்பாடி பழனிச்சாமிதான். ஒரு பக்கம் முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்தை விட்டுத்தர முடியாது. மற்றொரு பக்கம் வழிகாட்டு குழு அமைத்து தனது பக்கம் குவிந்திருந்த அதிகாரத்தை பரவலாக்கி, அதிகாரத்தை குறைக்க முடியாது. ஒருவேளை அதிகாரம் பரவலானால் முக்கிய முடிவுகளை தன்னிச்சையாக எடுக்க முடியாது. ஒவ்வொரு விஷயத்துக்கும் வழிகாட்டு குழுவிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற இரட்டை சிக்கல் அவருக்கு இருக்கிறது.
கட்சி ஆதிக்கம் முக்கியம்
சமீப கால தமிழக தேர்தல் சூழலுக்கு மாறாக, தற்போது, தொடர்ந்து இரண்டு முறை அதிமுக ஆட்சியை பிடித்துள்ளது. மறுபடியும் ஆட்சிக்கு வருவது என்பது அவ்வளவு எளிதாக நடக்கக் கூடிய விஷயம் கிடையாது. எனவே முதல்வர் வேட்பாளர் என்ற ஒரு அறிவிப்புக்காக, கட்சியில் தனக்கு உள்ள ஆளுமையை விட்டுத் தந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் அரசியல் ஸ்திரத்தன்மை என்ன ஆகும் என்ற கேள்வியை எடப்பாடி பழனிச்சாமியிடம் அவரது ஆதரவாளர்கள் எழுப்புவதாக கூறப்படுகிறது.
பலமான கட்சி
அதிமுகவின் பலமே அதன் தொண்டர்கள். தமிழகத்தில் அதிகமான தொண்டர்களைக் கொண்ட கட்சியும் அதிமுகதான். தலைமை என்ன சொன்னாலும் கட்டுப்படக்கூடிய ஒரு கட்சியாக அதிமுக இருக்கிறது. அப்படியான ஒரு வாய்ப்பை முதல்வர் வேட்பாளர் என்ற ஒற்றை அறிவிப்புக்காக விட்டு தர வேண்டுமா என்ற கேள்வியை எடப்பாடி ஆதரவாளர்கள் அவரிடம் கேட்பதாக கூறப்படுகிறது.
வாக்கு வங்கி
வழிகாட்டு குழு ஒன்று, அமைக்கப்பட்டால் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பல நிர்வாகிகளுக்கும் அதில் பொறுப்பு வழங்க வேண்டும். தற்போது மேற்கு மாவட்டங்களை சேர்ந்த பலரும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியலுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். மேலும் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகமாக மேற்கு மண்டலத்தை நம்பியிருக்கிறது. எனவே, அதிகாரத்தை பரவலாக்குவதால், இதில் இழப்புகள் ஏற்படலாம் என்றெல்லாம் எடப்பாடி தரப்புக்கு யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது.
அழுத்தங்கள்
ஓ.பன்னீர் செல்வத்துக்கு இழப்பதற்கு அதிகமாக எதுவும் இல்லை. எனவே அவருக்கான கவலைகளும் அதிகமில்லை. அதிகாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான் பல்வேறு விஷயங்களையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். எனவே, பன்னீர் செல்வத்தை விட எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் அதிகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
சமாளிப்பார் எடப்பாடியார்
அதேநேரம் வழிகாட்டும் குழுவை அமைத்து அதில் பாதிக்கும் பெரும்பாலானோரை தனது ஆதரவாளர்களாக இருக்க வைப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் திட்டம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்து ஓரளவுக்கு நிலைமையை சமாளிப்பார். எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோதிலும், ஆட்சிக்கு ஆபத்து என்ற நிலை வந்த போதிலும் சிரித்த முகத்தோடு நிலைமையை சமாளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தவர். எனவே எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் அதை எளிதாக சமாளிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது, என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.