ஓ.பன்னீர் செல்வம் மாமியார் மறைவு.. உத்தமபாளையம் சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாமியார் மறைவையொட்டி, அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் வயது முதிர்வாலும், உடல் நலக்குறைவாலும் கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடல் 8ம் தேதி அடக்கம் செய்யப்பட்ட நிலையில் துணை முதல்வரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த வள்ளியம்மாள் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஓபிஎஸ் மாமியார்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கடந்த புதன்கிழமை இரவு, வள்ளியம்மாள் (92) உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர்கள் அஞ்சலி
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
உடல் அடக்கம்
இந்த நிலையில், உத்தமபாளையத்தில் உள்ள மயானத்தில் வள்ளியம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். ஆனால் அப்போது முதல்வர் அங்கு போக முடியவில்லை.
முதல்வர் ஓய்வு
தேர்தலுக்கு பிறகு, சேலம் நகரில் உள்ள தனது வீட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்கியிருந்தார். சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுப் போடுவதற்காக சேலம் சிலுவம்பாளையம் சென்ற முதல்வர், ஓட்டு போட்டுவிட்டு சேலத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். எனவே, அவர் இன்று முதல்வர் உத்தமபாளையம் சென்று, அஞ்சலி செலுத்தினார்.