எல்லா மாநிலமும் கடன் வாங்குகிறது.. எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம்.. முதல்வர் அதிரடி பேட்டி
சென்னை: கடனை பற்றி கவலைப்படாமல், மக்கள் நலனுக்காக திட்டங்களை அறிவித்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கை படி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
திமுக ஆட்சி காலத்திலும் கடன்
அரசு அறிவிப்புகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு, ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். அரசு அறிவித்ததும், தான் சொல்லி, அரசு செய்ததை போல காட்டிக் கொள்கிறார். அனைத்து மாநிலங்களும் கடன் வாங்கிதான் நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், 1 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்ததாக திமுக தலைவர் ஸ்டாலினே தெரிவித்துள்ளார்.
மக்கள் முக்கியம்
எந்த ஒரு மாநிலமும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு கடன் வாங்குவது கிடையாது. மக்கள் நலன் தான் முக்கியம். எனவே வளர்ச்சித் திட்டங்களுக்காக கடன் வாங்கப்படுகிறது. எதிர்காலத்தில் கடன்களை அடைப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக கடன் அளவு
10 ஆண்டுகளில் ஏறிய விலைவாசிக்கு ஏற்ப கடன் அளவும் அதிகரித்துள்ளதால், இப்போது 5.7 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசின் நலத்திட்ட அறிவிப்புக்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதை நிறைவேற்றிக் காட்டும் அதிமுக அரசு. டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டு பற்றி நான் ஏற்கனவே விரிவாகப் பேசியுள்ளேன். இ-டெண்டரில் எப்படி ஊழல் செய்ய முடியும்? திமுக ஆட்சி காலத்தில் டெண்டர் முறைகேடுகள் நடைபெற்றன. இப்போது நடப்பது இல்லை. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
தமிழக தேர்தல் தேதி
இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்த இருக்கிறார். அப்போது 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும் என்பதால் அரசு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்க முடியாது. இந்த நிலையில், முதல்வர் அதிரடி அறிவிப்புகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது செய்தியாளர் சந்திப்பில், தனது பழைய அறிவிப்புகளை மேற்கோளிட்டு முதல்வர் பேசியது குறிப்பிடத்தக்கது.