அமைச்சரவை மாற்றமா...? ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். முக்கிய ஆலோசனை
சென்னை: அமைச்சரவை மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக அரசில் அமைச்சரவை மாற்றம் என்பது அவ்வப்போது நடைபெறும் வழக்கமான ஒரு நடவடிக்கையாகும். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அமைச்சர்களாக இருந்தவர்கள் அன்றாட தினசரிகளை பார்த்து தங்களிடம் பதவி உள்ளதா..பறிக்கப்பட்டதா என்பதை தெரிந்துகொள்வர். அந்தளவுக்கு யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல் துணிச்சல் நடவடிக்கையில் ஈடுபடுவார் ஜெயலலிதா.
முன்னாள் அமைச்சர்கள்
மேலும், அதிமுகவை பொறுத்தவரை இந்தியாவில் உள்ள வேறெந்த கட்சிக்கும் இல்லாத ஒரு சிறப்புண்டு. அது என்னவென்று கேட்கிறீர்களா, அதிமுகவில் மட்டுமே முன்னாள் அமைச்சர்கள் என்ற பெரும் பட்டியலே உண்டு. இந்தக்கதையெல்லாம் ஜெயலலிதா இருந்தவரை மட்டுமே, அவர் மறைவுக்கு பிறகு அமைச்சரவையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
காமெடி பேச்சு
பல அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போதும், பொதுக்கூட்டங்களிலும் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசும் காமெடி எல்லாம் நடந்தது. ஆனால் யாரும் மாற்றப்படவில்லை. பதவியேற்ற நாள் முதல் அமைச்சர்களிடமும், எம்.எல்.ஏக்களிடமும் பவ்யம் காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் மணிகண்டனை அமைச்சரவையில் இருந்து நீக்கி தனது துணிச்சலைக் காட்டினார்.
புதியவர்களுக்கு வாய்ப்பு
இதனிடையே சிறப்பு நீதிமன்ற தீர்ப்பால் பாலகிருஷ்ண ரெட்டியும் அமைச்சர் பதவியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதிதாக நான்கு பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளித்துவிட்டு, இரண்டு பேருக்கு கல்தா கொடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.. இந்த வாரத்திற்குள் அதிரடி அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.