ஜெயலலிதா பிறந்தநாள் : அதிமுகவை காக்க வீட்டில் தீபம் ஏற்றி குடும்பத்துடன் உறுதி மொழி ஏற்ற இபிஎஸ்
ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவை காப்போம் என்று வீட்டில் தீபம் ஏற்றி அதிமுக துணை ஒருங்கிணப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். அதிமுகவை காப்போம் எனவும் உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
மறைந்த முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரணி போற்றும் அன்னபூரணி,தமிழர்களின் தார்மீக உரிமை மீட்ட சரித்திர தலைவியின் வழியில் எதிரிகளையும்,துரோகிகளையும் விரட்டியடித்து,மக்களையும்,அதிமுகவையும் உயிர்மூச்சு உள்ளவரை காப்பேன் என மாலை 6 மணிக்கு இல்லங்களில் தீபமேற்றி உறுதியேற்போம். இது அம்மா மீது ஆணை!என்று பதிவிட்டிருந்தார்.
அதன்படி சரியாக 6 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். அதிமுகவை காப்போம் எனவும் குடும்பத்துடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டார். இதே போல அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். அமைச்சர்களும், அதிமுக தொண்டர்களும் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில்,
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த பாதையில் இன்றுவரை அதிமுக அடிபிறழாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இம்மண்ணுலகைவிட்டு பிரிந்திருந்தாலும், அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இந்த இயக்கத்திற்கு நன்மை செய்வோரை அன்போடு ஆசீர்வதித்தும், தீங்கு செய்ய நினைப்போரை அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் ஜெயலலிதாவின் ஆன்மா இந்த இயக்கத்தை என்றும் காத்துவரும் என்பதும் நம் நம்பிக்கை.
இந்த நம்பிக்கையில் இருந்து தான், எப்பேர்பட்ட இன்னலை நாம் சந்திக்க நேர்ந்தாலும், துளியும் அச்சம் இல்லாமல் அதை எதிர்கொள்ளும் துணிச்சலை நாம் பெறுகிறோம் என்பது நம் இதயங்களுக்கு தெரியும். நம் விசுவாசமானது ஜெயலலிதாவிற்கும், அவரது கண்ணுக்கு கண்ணாய் இருந்த இயக்கத்துக்கும், இந்த இயக்கத்தை மீண்டும் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் மக்களுக்கும் தான் சொந்தம்.
தரணி போற்றும் அன்னபூரணி,தமிழர்களின் தார்மீக உரிமை மீட்ட சரித்திர தலைவியின் வழியில் எதிரிகளையும்,துரோகிகளையும் விரட்டியடித்து,மக்களையும்,அதிமுகவையும் உயிர்மூச்சு உள்ளவரை காப்பேன் என மாலை 6 மணிக்கு இல்லங்களில் தீபமேற்றி உறுதியேற்போம். இது அம்மா மீது ஆணை!#என்இல்லம்_அம்மாவின்இல்லம் pic.twitter.com/668C8c7Vw0
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) February 24, 2021
இன்னும் இரண்டே மாதங்களில் நாம் மீண்டும் ஒரு பரீட்சையை சந்திக்க உள்ளோம். இதில் நல்லாட்சி பெற்ற மக்களும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருந்தாலும் துரோகிகள் எப்படியாவது நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்பட தொடங்கி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் நம் உழைப்பாலும், உத்வேகத்தாலும், ஒற்றுமை உணர்வாலும், மக்கள் மீதுள்ள நேசத்தாலும், திசை மாறா விசுவாசத்தாலும் தோற்கடித்து, மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.
இந்த குறிக்கோளோடு அதிமுகவினர் அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோளை விடுக்கிறோம். பிப்ரவரி 24 - ஜெயலலிதாவின் பிறந்த நாள். இந்த நாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் என் இல்லம் ஜெயலலிதாவின் இல்லம்'' என்று உளமார நினைத்துக்கொண்டு உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து, ஜெயலலிதாவின் புனித ஆன்மாவிடம் பிரார்த்தனை செய்து, உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். அதனை ஏற்று இன்று அதிமுக தொண்டர்கள் பலரும் தீபம் ஏற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.