குமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி வழங்கினார் முதல்வர் எடப்பாடி
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ 1 கோடி நிதியை வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை- மார்த்தாண்டம் சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 8-ஆம் தேதி சிறப்பு எஸ் ஐ வில்சனை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக குற்றவாளிகளை தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டன.
குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ 7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் அறிவித்துள்ளார். இந்த நிலையில் வில்சனின் குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் இரு மகள்கள் வந்திருந்தனர். அவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ 1 கோடி நிதியை வழங்கினார்.