இனி நவம்பர் 1 .. தமிழ்நாடு நாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு!
நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்
சென்னை: நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சிறப்பான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
50'களில் நடந்த சம்பவம் இது.. 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. மொத்தமாக 75 நாள்.
மொழிக்காக 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் உட்கார்ந்து கொண்டார் சங்கரலிங்கனார். இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான்.
சங்கரலிங்கம்
நாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். "இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தும், அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கம்.
ஏக்கம்
இறுதியாக, சங்கரலிங்கம் அறிஞர் அண்ணாவிடம், "அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? " என்று ஏக்கமாக கேட்டார். 76-வது நாள் உடம்பு மோசமாகி ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரும் பிரிந்துவிட்டது. அப்போது அவருக்கு வயதோ 78.
அழுத்தங்கள்
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் அரசு அதற்கும் செவிசாய்க்கவில்லை. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, ‘தமிழக அரசு' என்று பெயரை மாற்றி வரலாறு படைத்தது.
தீர்மானம்
அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
பிறந்த நாள்
அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையிலும் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது.
தமிழ்நாடு நாள்
இந்த வரலாற்று சம்பவத்தின் அடுத்த கட்டத்துக்கு தமிழகத்தை கொண்டு சென்றுள்ளார் நம் தமிழக நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று ஆம்.. இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசினார். அப்போது, "ஆண்டுதோறும் நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்" என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை வெளியிட்டார். இதற்கு அவையில் உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.