தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட போகக்கூடாது - முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்று இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது. அந்த அளவுக்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உருவாகாமல் பார்க்க வேண்டும். தற்போது கொரோனா தடுப்பு பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து போதுமான அளவு இருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். இந்த அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உட்பட 6 முடிவுகள் எடுக்கப்பட்டன.