8 மாத கர்ப்பிணி மருத்துவர்.. கொரோனாவால் பலியான சோகம் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா மறைந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்திலும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த நிலையில், தமிழகத்தில் 27 ஆயிரத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இறப்புகளும் அதிகரித்து வருகிறதே தவிர, குறைவது போன்று தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில், தமிழகத்தில் நாளை (மே.10) முதல் 24ம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை, இறப்புகளை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு நம்புகிறது. இந்த நிலையில், மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முதல் அமைச்சரவை கூட்டம்- கொரோனா, இடஒதுக்கீடு வழக்கு குறித்து ஆலோசனை
8 மாத கர்ப்பிணி
மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியான இவருக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகப்பிரியா, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட நுரையீரல்
கொரோனோ பாதிப்பு தீவிரமடைந்ததன் காரணமாக, 90% க்கும் மேல் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கர்ப்பிணி என்பதால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்த அரசு மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சக மருத்துவ ஊழியர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
முதல்வர் இரங்கல்
இந்த நிலையில், முன்களப் பணியாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முன்களப்பணி வீரராக - அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரும்பணி ஆற்றிய இளம் மருத்துவரை இழந்திருப்பது ஆழ்ந்த வேதனை தருகிறது.
முன்களப்பணி வீரர்கள்
மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் முன்களப்பணி வீரர்களாக நிற்கும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்திட அறிவுறுத்தி இருக்கிறேன். மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்