ஆமா.. அமைச்சர்கள் ஆபீஸ் வெளியே ஏன் இவ்வளவு கூட்டம்.. விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. பறந்த உத்தரவு!
சென்னை: அமைச்சர்களை பார்க்க தினந்தோறும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கூடுவதால் கோட்டையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
இதை கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களுக்கு அதிரடியாக ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளார்.
விஷயம் இதுதானாம்.
பயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்!
கோட்டையில் அமைச்சர்கள்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூடவுள்ளதால் அதற்கான முன் தயாரிப்பு பணிகளில் அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது தலைமைச் செயலகத்தில் உள்ள தங்கள் அறைகளில் அமர்ந்து ஆய்வுக்கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர்களை பார்க்க கூட்டம்
அமைச்சர்களை சந்திப்பதற்காக நாள்தோறும் பொதுமக்கள், கட்சிக்காரர்கள், என பல்வேறு தரப்பினரும் கோட்டையில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட சில அமைச்சர்களின் அறைகளுக்கு முன்புதான் வந்து காத்துக் கிடக்கிறார்கள். வேலையே இல்லாவிட்டாலும், சும்மா பார்த்துவிட்டுச் செல்கிறோம் என்று அமைச்சர்களின் அறைகள் முன்பாக காவலர்களோடு தினம் தினம் வாக்குவாதம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இது தவிர, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில், தினமும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகின்றன. இதற்காகவும் நிறைய பொது மக்கள் கோட்டைக்கு அணி வகுத்து செல்கிறார்கள். போலீசார் அவர்களை வரிசையில் நிற்க வைத்து, தலைமை செயலகத்தின் உள்ளே அனுப்பும் அளவுக்கு கூட நிலைமை போனது.
கவனித்த முதல்வர்
இந்த நிலையில்தான், தலைமைச் செயலகம் சென்றபோது, அமைச்சர்கள் அறைகளுக்கு வெளியே காத்திருந்து, முந்தியடித்த கட்சிக் காரர்களையும், தொண்டர்களையும் பார்த்த முதல்வர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். கட்சிக்காரர்களை முடிந்தவரை ஊரிலேயே சந்திக்குமாறும் தேவையற்ற கூட்டத்தை கோட்டையில் தவிர்க்குமாறும் அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
நெரிசல் இருக்காது
ஆர்வக்கோளாறில் ஒரு அமைச்சரை பார்க்க ஒரே நபர் தனது ஐந்தாறு ஆதரவாளர்களை அழைத்து வருவதால்தான் கோட்டையில் மக்கள் நெரிசல் ஏற்படுகிறதாம். குறிப்பிட்ட சில சீனியர் அமைச்சர்களை பார்க்கத்தான் வெளியூர்களில் இருந்து தினம் தினம் கூட்டம் கூடுகிறதாம். இது அத்தனையும் முதல்வர் கவனத்திற்குச் சென்றுள்ளது. எனவேதான், இப்படி ஒரு அதிரடி உத்தரவை அமைச்சர்களுக்கு வாய் மொழியாக பிறப்பித்துள்ளாராம். இனிமேல் கோட்டையில் அவசியமான மக்கள் மட்டும்தான் செல்வார்கள். எனவே கூட்ட நெரிசல் இருக்காது என்கிறார்கள் முதல்வர் அலுவலக வட்டாரத்தில்.