தமிழக உள்ளாட்சி தேர்தல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.. முக்கிய அறிவிப்பு வருகிறதா?
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்து கொண்னடர். எனவே விரைவில் தேர்தல் தேதி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
புதிதாக உருவான காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை பணிகள் நடைபெறாத காரணத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்த தேர்தலை வருகிற செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது,
அண்மையில் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்றும் சில நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், சில பேரூராட்சிகள் நகராட்சிகளாகும் தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார். மேலும் எந்தெந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்பதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் எனறும் கூறியிருந்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் திடீரென பற்றி எரிந்த கார்.. புகை அதிக அளவில் வெளியேறியதால் பரபரப்பு
முதல்வர் உத்தரவு
மேலும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவி;ட்டுள்ளார் என்றார். இதையொட்டி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது,
சரிபார்ப்பு பணி
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது கடந்த சட்டசபை தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வீடு வீடாக சரிபார்க்கும் பணிசளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். எநதெந்த வாக்காளர்கள் முகவரி மாறியுள்ளனர் என்ற விவரம் சேகரிக்கப்படுகிறது. மேலும் இறந்தவர்கள் பெயர்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் நியமனம்
மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகளை தொடங்கிவிட்டது. முதலில் 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தநத மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை கண்காணிப்பார்கள். உதவி தேர்தல் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள்.
ஸ்டாலின் ஆலோசனை
இந்நிலையில் மாலை 5 மணி அளவில் முதல்வ;ர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி மற்றும் நகர்புற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரிய கருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஏஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும்., தேர்தலை நடத்துவற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.