மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கப் போகிறார் ஸ்டாலின்.. வருகிறது அறிவிப்புகள்- அமைச்சர் சக்கரபாணி
சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு கவர்ச்சிகர திட்டங்களை அறிவிக்க ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறாராம். இதை உணவு வழங்கல் துறை அமைச்சர் சங்கரபாணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி திரட்டப்பட்டு முதற்கட்டமாக 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் கோவை வந்துள்ளன.
இந்த சூழலில், கோவையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறையின் அமைச்சர் சக்கரபாணி இன்று பி.எஸ்.ஜி மருத்துவமனையில் துவக்கி வைத்தார்.
சட்டசபையைக் கூட்டுங்கள்.. முதல்வரை நேரில் சந்தித்து திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தல்
தடுப்பூசிகள்
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்த முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசி கொடுத்தாலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இலவச தடுப்பூசி
சி.எஸ்.ஆர் நிதி மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் கோவை மாவட்டத்தில் அதிக நிதி மூலம் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
சென்னைக்கு அடுத்து கோவை
கோவையில் 11 லட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த சில நாட்களை விட 20 என்ற எண்ணிக்கையில் தான் தொற்று அதிகரித்துள்ளது. தொற்றை குறைக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கோவை- கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முக கவசம் கட்டாயம்
மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியே சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லை. தொடர்ந்து ஆய்வு பணிகளுக்காக அமைச்சர்கள் வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலினும் கோவை வந்து ஆய்வு செய்துள்ளார்.
பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை
முதல்வரின் பணிகள் எதிர்காலத்தில் மக்களிடம் எதிரொலிக்கும். கோவையில் நாங்கள் வெற்றி பெறுவோம். இதற்காக பல கவர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். அமைச்சர் கூறுவதைப் பார்த்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இப்போது அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிகிறது.