திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் கோமாளிகளே.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொளேர் அட்டாக்
சென்னை: திராவிடம் என்றால் என்ன என்று கோமாளிகள் கேட்கிறார்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை மரக்காணம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே! கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே! செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்! கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும் என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அவரது பாடலுக்கேற்ப பள்ளிக்கல்வித் துறை இன்றைக்கு இந்த திட்டத்தை செயல்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை
புரட்சிகர திட்டம்
இல்லம் தேடிக் கல்வி என்பது சாதாரணத் திட்டமல்ல! எல்லாத் திட்டங்களையும் போல இதுவும் ஒரு திட்டம் என சொல்ல முடியாது. லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் வாழ்வில் ஒளியேற்றப் போகிற திட்டம் இது. மிகப் பெரிய கல்விப் புரட்சிக்கு மறுமலர்ச்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய விஷயங்கள் எல்லாம் இப்படி சிறு சிறு அளவில்தான் தொடங்கப்பட்டது. நூற்றாண்டுகாலமாக மறுக்கப்பட்ட கல்வியை திண்ணைப் பள்ளிக் கூடங்கள் வழியாகக் கொண்டு வந்து சேர்த்தது ஆரம்ப கால திராவிட இயக்கம்.
திராவிடமும் கோமாளிகளும்
திராவிடம் என்றால் என்ன என்று சில கோமாளிகளும் அதைப் பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்களே... இதுதான் திராவிடத்தின் கொள்கை மறந்துவிடக் கூடாது. நீதிக்கட்சி தோன்றிய பிறகு சென்னை மாகாணத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோரால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுச் செழுமைப்படுத்தப்பட்டது. அதுபோன்ற சிறப்பைப் பெறக் கூடிய ஒரு திட்டமே இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.
கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வது
கொரோனா கால பாதிப்பை எப்படி சரிசெய்வது என்று பள்ளிக் கல்வித்துறை சிந்தித்து உருவாக்கியதுதான் இல்லம் தேடி கல்வித் திட்டம். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அல்லது 2 மணிநேரம் வசதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப ஆசிரியர்கள் உங்களை படிக்க வைப்பார்கள். பள்ளியோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது என கருதாமல் வீட்டுக்கும் வந்து உங்களுக்கு கற்றுதரக் கூடிய கடமையின் தொடர்ச்சிதான் இல்லம் தேடி கல்வித் திட்டமாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தினோம். ஆனாலும் கற்றல் இடைவெளிக்கு கொரோனா காரணமாக அமைந்துவிட்டது. மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக நடத்த வேண்டும். கனிவுடன் நடத்துங்கள்.
திராவிட இனத்தின் ஆட்சி
தனித்துவம் கொண்ட இத்திட்டம் வகுப்பறையைப் பள்ளிகளுக்கு வெளியேயும் நீட்டிக்கச் செய்யும் மகத்தான முயற்சி இத்திட்டம். மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருக்கப் போகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டிய திட்டம் இது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இதில் இணைந்து கொள்ளலாம். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பது திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. அந்த அடிப்படை நோக்கங்களை அடைய இந்த இயக்கம் பெரும் புரட்சிகளை நடத்தி இருக்கிறது. இன்னார்தான் படிக்க வேண்டும்- இன்னார் படிக்கக் கூடாது என்று சொல்லக் கூடிய காலம் இருந்தது. அதை மாற்றியது திராவிட இயக்கம். இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. இனத்தின் ஆட்சி என்பதை நான் முன்னரே சொல்லி இருக்கிறேன். மத்தியில் கூட்டாட்சி- மாநிலத்தில் சுயாட்சி என்ற மகத்தான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடிய இயக்கம் நம்முடைய இயக்கம். மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை ஆட்சியிலும் முன்னெடுக்க நிலைக்கக் கூடிய ஆட்சி இது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.