மும்மொழி கொள்கை.. ஸ்டேடியத்திற்கு வெளியே சிக்ஸர் பறக்க விட்ட முதல்வர்.. எதிர்க்கட்சிகள் கூட பாராட்டு
சென்னை: மத்திய அரசின் மும்மொழி கொள்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி எடுத்துள்ள முடிவிற்கு தமிழகம் முழுக்க பரவலாக பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இந்த பிரச்சனையில் அமைதியாக இருந்த
முதல்வர் சத்தமே இன்றி தலைமை செயலகத்திற்கு வெளியே சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டுள்ளார்.
தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கையை கொண்டு வர கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் பல்வேறு புதிய திட்டங்கள், 10+2க்கு பதிலாக 5+3+3+4 கல்விமுறை, எம்.பில் படிப்பு நீக்கம் என்று அதிரடி அறிவிப்புகள் நிறைய வந்தது.
அதோடு கூடவே மும்மொழி அறிவிப்பும் வந்தது. இந்தியை திணித்தால் பிரச்சனை வரும் என்று, எந்த மொழியையும் திணிக்காமல் மும்மொழி கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது.
நாகூர் தர்காவுக்கு 20 கிலோ சந்தனக் கட்டைகள்... ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மொழி கொள்கை
சமஸ்கிருதம் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் மும்மொழி கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும். ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி படிக்கலாம். அதன்பின் தமிழ், ஆங்கிலம், மூன்றாவதாக ஒரு மொழியை படிக்க வேண்டும். இந்த மொழியை திணிக்க மாட்டோம். மாணவர்களே இதை தேர்வு செய்து கொள்ள முடியும். மாநில அரசுகள் இதில் முடிவு எடுத்துக்கொள்ளலாம், என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
திமுக எதிர்ப்பு
மும்மொழி கொள்கை அறிவிப்பு வந்ததும் அதை முதல் ஆளாக திமுக எதிர்த்தது. இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதேபோல் இது தொடர்பாக தேசிய தலைவர்கள், கட்சிகளுடன் பேச போகிறேன். விரைவில் சட்ட போராட்டம் நடக்கும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். அதோடு திமுக சார்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சஸ்பென்ஸ்
ஆனால் முதல்வர் பழனிச்சாமி இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். மும்மொழி கொள்கையில் எந்த மொழியை அனுமதிக்கலாம் என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு கூறி இருந்தது. இதனால் முதல்வர் என்ன முடிவு எடுக்க போகிறார். என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிட போகிறார் என்று சஸ்பென்ஸ் நிலவி வந்தது. இவரின் முடிவு தமிழகத்தின் மொழிக்கொள்கையை மாற்றும் சக்தி கொண்டது என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றது.
கூட்டம் நடத்தினார்
இப்படி தமிழகம் மொத்தமும் முதல்வரின் முடிவு என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த போதுதான் முதல்வர் பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினார். கல்வி அமைச்சர், கல்வியாளர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை.. 60 வருட திராவிட அரசியலுக்கான அறிக்கை..அண்ணா தொடங்கி வைத்த மொழிக்கொள்கைக்கான அறிக்கை!
அறிக்கையில் என்ன சொன்னார்
- தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையின் சாராம்சம் இதுதான்,
- கடந்த 80 ஆண்டு காலமாக தமிழகம் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர்.
- இது தொடர்பாக நாங்கள் பல போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.
- 1965ல் இருந்தே இந்தி திணிப்பை தமிழகமே எதிர்த்து வந்துள்ளது .
- 1968லேயே தமிழக சட்டசபையில் முதல்வர் அண்ணா, மும்மொழி கல்விக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.
- முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களும் இரட்டை மொழிக்கொள்கையில் தீவிரமாக இருந்துள்ளனர். தற்போது இருக்கும் தமிழக அரசும் இதே கொள்கையோடுதான் இருக்கிறது.
- மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று உள்ளது. அதை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
- மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் அதிமுக அரசு எப்போதும் அனுமதிக்காது.
- எப்போதும் போல மாற்றம் இன்றி இருமொழி கல்விக் கொள்கை மட்டுமே தமிழகத்தில் இருக்கும் என்று முதல்வர் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைதளம் பாராட்டு
முதல்வரின் இந்த மொழிக்கொள்கை முடிவை தமிழகம் முழுக்க பரவாலாக மக்கள் எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். முதல்வர் எடுத்த முடிவு சிறப்பானது. தமிழகத்தின் கொள்கை இதுதான் என்று அவர் மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். "இபிஎஸ் இஸ் ராக்கிங்" என்று பலரும் டிவிட் செய்து வருகிறார்கள். கட்சி சார்பு இன்றி ஒருமித்த குரலில் இந்த மொழி பிரச்சனையில் தமிழகம் ஒன்று கூடி இருக்கிறது. முதல்வரை பாராட்டி இருக்கிறது.
ஸ்டாலின் பாராட்டு
அரசியல் தலைவர்கள் வரிசையாக முதல்வரை பாராட்டி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமியை திமுக தலைவர் ஸ்டாலினும் பாராட்டி இருக்கிறார். #NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள
முதல்வர் பழனிசாமிக்கு நன்றி!
மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்!, என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய பாராட்டு
தமிழகத்தின் பெருவாரியான மக்கள் எதிர்பார்த்த முடிவை, முதல்வர் பழனிச்சாமி துணிச்சலாக எடுத்துள்ளார். கூட்டணியில் பாஜக இடம்பெற்று இருந்தாலும், அதிமுகவின் தனிப்பட்ட கொள்கை இதுதான் என்பதை முதல்வர் வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். இன்னும் 10 மாதங்களில் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் முதல்வரின் இந்த முடிவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் இந்த மும்மொழி கொள்கை முக்கிய பங்கு வகிக்க போகிறது.