புதிதாக 500 பேருந்துகள்... முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சென்னை: 159 கோடி ரூபாய் மதிப்பிலான 500 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 100 பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 150 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கும்பகோணம் கோட்டத்திற்கு 110 பேருந்துகள், மதுரைக்கு 50 பேருந்துகள், கோவை மற்றும் நெல்லைக்கு தலா 30 பேருந்துகள், சேலத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் விழுப்புரத்திற்கு 10 பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு மொத்தம் 1, 500 கோடி ரூபாய் செலவில் 5000 புதிய பேருந்துகளை வாங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1001 கோடி ரூபாய் செலவில் 3381 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று 500 புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில், நெல்லை, கோவை, சேலம், மதுரை, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய 6 கோட்டங்களுக்கு 250 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது ஒப்பந்தம் போட்டதன் அடிப்படையில் 16 நிறுவனங்களுக்கான அடிக்கற்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நட்டு வைத்தார்.
மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 7 கோடி ரூபாய் செலவில் 137 வகையான உபகரணங்களை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.